Wednesday, February 26, 2025

பழைய புத்தகக் கடைகள் - சற்றே மாறிய பார்வை

கல்லூரி காலங்களில் விலைக்கூடிய புத்தகங்களை வாங்க முடியாத நேரத்திலும், ஒரு சில பகுதிகள் மட்டுமே ஒரு புத்தகத்தில் தேவைப்படும் வேளையிலும் மட்டும் பழைய புத்தகக் கடைகளை நோக்கி போனதுண்டு. மற்றபடி விரும்பி வாசிக்கக்கூடிய புத்தகங்களுக்காக அவ்வாறு போனதில்லை. பொதுவாக வேறொருவர் பயன்படுத்தி தனக்கு தேவையில்லை என்றோ, பழையதாகியது என்றோ தூக்கி எறியப்பட்ட புத்தகங்களை நாம் ஏன் வாங்க வேண்டும் என்ற எண்ணம். அதில் நிறைய கிறுக்கல்கள் இருக்கும், கோடிட்டிருக்கும், கிழிந்திருக்கும் என்பது போன்ற பார்வையே எனக்கு மேலோங்கியிருக்கும். பாடப்புத்தகங்கள் விலை அதிகமாக இருந்ததால் வேறு வழியில்லை. மற்றபடி நம்மால் முடிந்த அளவு புத்தகங்கள் புதிதாக வாங்கியே படிப்போம் என்ற எண்ணம்.

 வீடில்லாப் புத்தகங்கள் / Veedilla Puthagangal - Centaram Books

சமீபத்தில் படித்த "வீடில்லாப் புத்தகங்கள்" (எஸ்.ரா) வேறு பார்வையை கொடுத்துள்ளது. நல்ல நிலையில் உள்ள புத்தகங்களும் கிடைக்கும், அரிய புத்தகங்கள், நமக்காக காத்துக் கொண்டிருக்கும் புத்தகங்கள், நம் பார்வையை மாற்ற எதேச்சையாக கிடைக்கக்கூடிய புத்தகங்கள், இப்படி ஏராளமானவை, அதுவும் குறைந்த விலையில். வேறொருவர் வேண்டாம் என வெளியேற்றியதை நமக்கு தேவைப்பட்டால் வரவேற்பதில் என்ன தவறு!! ஒரு வகையான ஈகோவும் இவ்வளவு நாள் ஒட்டிக்கொண்டிருந்ததை உணர முடிந்தது.

"வீடில்லாப் புத்தகங்கள்" - சாலையோர புத்தகங்களை விர்ஜீனியா வுல்ஃப் இப்படிதான் அழைத்துள்ளார். உண்மை தான். இன்னும் இருப்பிடமேதும் கிடைக்காமல் சாலையிலேயே வசித்து வருகிறது தன்னை ஏந்தும் கைகளுக்காக காத்துக்கொண்டு. இப்புத்தகத்தில் எஸ்.ரா சாலையோர அல்லது பழைய புத்தக்கடைகள்/வண்டிகளுடன் தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள், நடந்த சம்பவங்கள், கிடைத்த புத்தகங்கள் என பலவற்றை அழகாக விவரித்துள்ளார். அக்கடைக்காரர்களுடன் ஏற்படும் வித்தியாசமான நட்பும் ஆங்காங்கே இடம் பெற்றுள்ளன. பழைய புத்தகங்களில் யாரோ ஒருவரால் எழுதப்பட்ட குறிப்புகளை யார் யாருக்காக எழுதியிருப்பார்கள் என்ற எஸ்.ராவின் எண்ண ஓட்டங்கள் இருப்பது படைப்பாளிகளுக்கே உண்டான கற்பனை வளம்.

எனக்கு அப்படியெல்லாம் தோன்றுமா என்று தெரியவில்லை. ஆனால் பழைய புத்தகங்கள்/கடைகள் அவசியம் பார்க்க வேண்டியவை என்று நம்புகிறேன். அதன் விளைவாக தற்போது எங்கள் நூலகத்திற்கும், வீட்டிற்கும் சில பழைய புத்தகங்கள் வாங்கியுள்ளேன். அவற்றுள் சில புத்தகங்கள் நிச்சயம் என்னால் புதியதாக வாங்க இயலாது (விலையினால்). இதில் எனக்கு கிடைத்த இன்னொரு படிப்பினை நாம் பயன்படுத்தும் புத்தகத்தினை முடிந்தவரை நல்ல நிலையில் வைத்துக்கொள்வது பின்னர் ஒரு நாள் வேறு ஒருவருக்கு போய்சேர உதவியாக இருக்கும் என்பது தான்.

Monday, February 17, 2025

அரசுப் பள்ளி - அனுபவக் குறிப்புகள்: 3

கண்டிப்பாக Pre KG, LKG, UKG போன்ற பெரிய படிப்புகள் எங்கள் மகளுக்கு தேவையில்லை என்று முடிவு செய்திருந்ததால் அரசு அங்கன்வாடிக்கு ஆறு வயது வரை சென்று வந்தாள். அவள் இஷ்டத்திற்கு ஏற்ப விடுப்பு எடுத்துக் கொள்வது என்று மகிழ்ச்சியாகவே இருந்தது. ஆறு வயது நெருக்கத்தில் அவளுக்கு அங்கு சொல்லிக்கொடுப்பது எல்லாம் சலித்துப்போகவே விடுப்புகள் நிறைய எடுக்க ஆரம்பித்தாள்.

அவளின் அங்கன்வாடியில் தான் அவள் தனியாக உண்ண கற்றுக்கொண்டது. சக குழந்தைகளுடன் நெருக்கமாக பழகியது. அங்கு தன்னுடன் இருந்த நிறைய பேர் இன்று பள்ளியிலும் உடன் இருப்பது மகிழ்ச்சி. அவளின் அங்கன்வாடி ஆசிரியரும் சரி, சமைக்கும் அத்தையும் சரி அவள் அங்கு இருந்த காலத்தில் மிக அருமையாக பார்த்துக் கொண்டனர் என்றால் மிகையாகாது. அவளை அங்கன்வாடியில் சேர்த்தது மிகச்சரி என்று சொல்வதற்கு நிறைய தருணங்கள் கிடைத்தது.

எனினும் ஒரு நிகழ்வு.

அங்கன்வாடிக்கு என்று ஒரு சீருடை உண்டு. இப்போது மாற்றி விட்டார்கள், நிறம் மற்றும் அமைப்பினை. அப்போது நீல நிறத்தில். ஆண் குழந்தைகளுக்கு சட்டை மற்றும் அரைகால் சட்டை. ஆனால் பெண் பிள்ளைகளுக்கு பாவாடையாகவும் இல்லாமல், சட்டையாகவும் இல்லாமல் தரையில் உட்கார வசதியில்லாமலும், விளையாட ஏற்றதாகவும் இல்லாமல் இருக்கும். இரண்டு சீருடைகள் தருவர். அத்துணி வேறு எங்கும் கிடைக்காது. கூடுதலாக வாங்க இயலாது. அதனால் சில நாட்கள் குழந்தைகள் வேறு உடைகளை அணிவது வழக்கம். அவ்வாறு ஒரு நாள் பள்ளியில் வருணிகாவின் சீருடை ஈரமானதால் தன் பையில் இருந்த தன் அரைகால் சட்டை போன்ற ஆடையை மாற்றிக்கொண்டாள். அவளின் அங்கன்வாடி ஆசிரியர் இது போன்ற ஆடையை பள்ளிக்கு போட்டுவரக் கூடாது என அவளிடமே தெரிவித்தார். அதனை அவள் என்னிடத்தில் கூறும் போது என்ன சொல்வதென்றே தெரியாமல் இருந்தது! 

வீட்டில் மட்டுமே உடுத்தக்கூடிய ஆடைகளை பள்ளிக்கு அணிவிக்கக்கூடாது என்ற குறைந்தபட்ச அறிவினைக் கொண்ட நாங்கள், நிச்சயம் அது போன்ற உடையினை கொடுத்து அனுப்பியிருக்க மாட்டோம் என்பது குறிப்பிடத்தக்கது.

 பெண் எழுத்து: ஆடை அரசியல் | Female Writing: The Politics of Dress -  hindutamil.in

ஐந்து வயது மகள் அணிந்த ஆடை அவளின் முட்டி வரை மட்டுமே இருந்தது என்பதும்  இறுக்கமானது என்பதும் தான் அவர்களின் பிரச்சனை. ஐந்து முதல் ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகள் மட்டுமே உள்ள இடத்திலும் இது என்ன மாதிரியான ஆடை கட்டுப்பாடு என்று இன்றளவும் எனக்கு விளங்கவில்லை. அந்த நிகழ்வினை நினைக்கையில் எரிச்சல் என்ற உணர்வு தான் மேலோங்குகிறது.

அரசுப் பள்ளி - அனுபவக் குறிப்புகள்: 2

அங்கன்வாடியில் துவங்கி தற்போது பயின்று வரும் மூன்றாம் வகுப்பு வரை பள்ளிக்குச் செல்வதில் வருணிகாவிற்கு எந்த தொந்தரவும் இருந்ததில்லை. ஏனோ இரு வாரங்களுக்கு முன்னர் திடீரென்று பள்ளிக்குச் செல்ல விருப்பமில்லை என சொல்லி ஒரே அழுகை. சரியென்று அவள் போக்கில் ஒரு நாள், இரண்டு நாள், மூன்று நாள் என பள்ளிக்கு விடுமுறை எடுத்தாயிற்று. பிரச்சனை என்னவென்று குழந்தைக்கு சரியாக சொல்லத் தெரியவில்லை. ஒரு வழியாக சில, பல காரணங்களை ஊகித்து/கண்டுபிடித்து, அதனை சரி செய்வதென்று மூவரும் ஒரு மனதாக முடிவு செய்தாயிற்று.

அவள் பள்ளிக்குப் போகாத மூன்றாவது நாள் பள்ளியின் தலைமையாசிரியர் உட்பட மூன்று ஆசிரியர்களிடமிருந்து தொலைப்பேசி அழைப்புகள். 

"அவளை அனுப்பி வைங்க. நாங்க பாத்துக்கறோம்."

"சரிங்க மேடம்/சார்."

"பாப்பா, பாத்தியா. ஸ்கூலயிருந்து உன்ன கூப்பிட ஆரம்பிச்சிட்டாங்க. உன்ன அவங்களுக்கு தேடுதாம்," என்று அம்மா சொல்ல, அரை மனதுடன் அவள் பள்ளிக்குச் சென்றாள்.

மறுநாள் பள்ளியில்:

"சார், கொஞ்சம் பாத்துக்கங்க," என்று நான் சொன்னது தான் தாமதம். அவளின் ஆசிரியர் அவளை விட ஒரு குழந்தையாக மாறி,

"மேடம், எனக்கு மூனு நாளா வேலையே ஓடல. இவ இப்படி இருக்கற பொன்னு இல்லையே, ஏன் இப்படி ஆனா, அவளுக்கு என்ன ஆச்சுனு யோசிச்சிட்டே இருக்கேன் மேடம். என்னால என் வேலைல கவனம் செலுத்தவே முடியல. எங்க கிட்ட அவளுக்கு ஏதும் பிரச்சனனு சொன்னா சரி செஞ்சிடலாம் மேடம்," என்று அவர் சொல்லும் போதே அவர் கண்ணில் அக்கறையும், கவலையும், கொஞ்சம் கண்ணீரையும் உணர முடிந்தது.

இப்படி ஒரு ஆசிரியர் என் மகளுக்கு தனியார் பள்ளியில் கிடைத்திருப்பாரா என்பது சந்தேகமே!! 

Best Tamil Quotes on Teacher | BeInspired.in

பி.கு: அந்த ஒரு வாரம் அழுகையுடன், சோகமாக பள்ளிக்கு சென்றவளை பார்ப்பதற்கு அழுகையாக வந்தது. ஒரு குழந்தை மகிழ்ச்சியாக சென்று வர ஒரு பள்ளி இல்லையோ என்ற கோபமும், விரக்தியும், இயலாமையும் அழுகையாகவே வெளிவந்தது.

Friday, February 7, 2025

அரசுப் பள்ளி - அனுபவக் குறிப்புகள் - 1

எனது மகள் பயிலும் அரசுப் பள்ளியில் ஏராளமான அனுபவங்கள் கிடைக்கின்றன. அவற்றை பதிவு செய்வது, புதிய அல்லது பழைய உரையாடல்களுக்கு பயன்படலாம் என்பதால் எழுத முடிவு செய்துள்ளேன்.

2024ம் ஆண்டு குழந்தைகள் தினத்தை ஒட்டி மூன்றாம் வகுப்பு பயிலும் வருணிகா தன் பள்ளியில் பயிலும் அனைத்து நண்பர்களுக்கும் (மொத்த மாணவியர் எண்ணிக்கை 30) வாழ்த்து தெரிவிக்க விரும்பி, வீட்டில் இருந்த வெள்ளை தாள்களை எடுத்து, அவற்றை கிழித்து ஒரு சிறிய விடிவ புத்தகம் போன்று நான்கு பக்கங்களில் செய்தாள். அதில் ஒரு பக்கத்தில் நண்பரின் பெயர், இரண்டாவது பக்கத்தில் குழந்தைகள் தின வாழ்த்து, மூன்றாவது பக்கத்தில் ஒரு படம் வரைந்து, நான்காவது பக்கத்தில் இவளின் பெயர் என்று ஒரு திட்டம் தீட்டி வேலையை தொடங்கினாள்.

Tamil nadu india government school hi-res stock photography and images -  Alamy

ஏறக்குறைய 30 நபர்களுக்கு செய்ய வேண்டும். ஆரம்பத்தில் சுலபமாக செய்து விடலாம் என்று எண்ணியிருந்தாள். ஆனால் முடியவில்லை. நாட்கள் மிகக் குறைவாக இருந்த போது தான் ஆரம்பித்து இருந்ததால், சிரமமாக உணர்ந்தாள். ஆனாலும் பாதியில் நிறுத்த மனசில்லை. இம்மாதிரி நேரத்தில் பெற்றோர்கள் தலையில் இவ்வேளைகள் விழுவதில் ஆச்சரியம் ஏதுமில்லை. வருணிகாவின் பெற்றோர்களும் இந்த முக்கியமான பணியில் ஈடுபட்டனர். வேலையும் சூடுபிடித்து இரண்டே நாட்களில் முடிந்தது. எனினும் இன்னும் வண்ணமயமாக இந்த பரிசு இருக்கலாமே என்று அவளுக்குத் தோன்ற, மீண்டும் மூவரும் களத்தில். ஒவ்வொருவருக்கும் ஏதேனும் மூன்று வண்ணங்களைக் கொண்டு ஒவ்வொரு பக்கத்தின் ஓரங்களையும் (borders) வண்ணமயமாக்கினார்கள்.  உண்மையில் இவ்வண்ணம் தீட்டியபின் அப்பரிசு கூடுதல் அழகாகியது.

குழந்தைகள் தின விழா முடிந்த பின் வருணிகா அவளின் நண்பர்கள் அனைவருக்கும் இப்பரிசினை வழங்கினாள். ஆசிரியர் இவ்வாறு நீங்களாக செய்து வழங்கும் பரிசே விலையுயர்ந்தது என பாராட்டி அனைவரும் இவ்வாறு செய்ய ஊக்கப்படுத்தியது இவளுக்கு கூடுதல் மகிழ்ச்சி.

குழந்தைகள் சந்தோஷமாக பெற்றுக் கொண்டனரா என பெற்றோர்கள் கேட்டனர். ஆம் என்றாள். மூவருக்கும் மகிழ்ச்சி.

மறு நாள் மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்தவள் சொன்ன முதல் விஷயம்,

 "அம்மா, சீனு நான் குடுத்த பரிச திருப்பிக் கொடுத்துட்டான்."

"ஏன்?" 

"நான் அவனுக்கு கொடுத்த பேப்பரில் கலர் அடிச்சிருந்தேன் ல?"

"ஆமாம்."

"அது அவனுக்கு பிடிக்கலையாம்."

"ஏன்னு கேட்டியா?"

"ம்ம்ம்ம்.."

"என்ன சொன்னான்?"

"அதுல இருந்த கலர் அவங்க கலர் இல்லையாம். அவங்களுக்கு வேற கலராம். அப்படினு சொல்லி திருப்பி கொடுத்துட்டான்."

அம்மாவுக்கு அதிர்ச்சி. சீனு நான்காம் வகுப்பு. அப்பா இறந்து ஒரு வருடம் தான் ஆகிறது. நல்ல சேட்டைக்காரன். படிப்பிலையும் ஓரளவுக்கு கெட்டி தான்.

"அம்மா, அது என்ன அவன் கலர் இல்லைனு சொல்றான்?"

"அந்த கலர் எல்லாம் அவனுக்கு பிடிக்கல போல. நாம அவன் கிட்ட கேப்போம் ."

கயிறு தான் பிரச்சனைனு நினைச்சா, நிறம்கூட பிரச்சனை தான் போல.  

The World Has Millions of Colors. Why Do We Only Name a Few? | Smithsonian

பழைய புத்தகக் கடைகள் - சற்றே மாறிய பார்வை

கல்லூரி காலங்களில் விலைக்கூடிய புத்தகங்களை வாங்க முடியாத நேரத்திலும், ஒரு சில பகுதிகள் மட்டுமே ஒரு புத்தகத்தில் தேவைப்படும் வேளையிலும் மட்டு...