"மொழிகளால் தொலைந்தவன்" - இப்புத்தகம் கிரி என்ற சிறுவனின் கதை. வட இந்தியாவில் பிறந்து, சிறுவனாக இருந்த போது, அவனின் பெற்றோர்கள் சொந்த கிராமத்தில் விவசாயம் செய்ய இயலாததால் தொடர்ந்து இந்தியாவின் பல மாநிலங்களில் தங்கி கட்டட வேலை செய்ய இடம்பெயரும் குடும்பத்தைச் சேர்ந்தவன். அவர்கள் செல்லும் ஒவ்வொரு மாநிலத்திலும், அவனுடைய, அவனின் சகோதரியுடைய கல்வி பாதிக்கக்கூடாது என்ற காரணத்தினால் பெற்றோர்களால் பள்ளியில் சேர்க்கப்படுகிறார்கள். எனினும் புதிய ஊர், புதிய மொழி என்ற அவஸ்தையினால் பெரும் போராட்டம் தான் எஞ்சுகிறது அக்குழந்தைகளுக்கு. ஒவ்வொரு ஊரிலும் ஏதோ ஒரு ஆசிரியரோ, நண்பர்களோ, அக்கம்பக்கத்தினரோ உதவ முன்வருவதால் அப்புது மொழியினைக் கற்று குழந்தைகள் தேர்ச்சி பெறுகின்றனர். பெரும் முயற்சி, அவமானங்கள், வலிக்குப் பிறகே!
கிரிக்கு உத்வேகம் கொடுத்து உதவும் ரஜினி, தனக்கு கிடைத்த சைக்கிளை கிரி பள்ளி செல்ல கொடுக்கும் தாபா ஒன்றில் வேலை செய்யும் சோட்டூ, தினமும் பாடம் சொல்லித் தரும் வித்யா அக்கா, கிரியின் முதல் நண்பர்கள் முரளி, நகுல், கோபக்கார ஆசிரியர் என அனைத்தும் நம் மனதில் ஆழமாக பதியக்கூடியவே. கிரி ஒவ்வொரு ஊராக மாறும் போது அவனுடைய கண்ணீர் நம்மை பாதிக்கிறது. அக்குழந்தைக்கு மீண்டும் எப்போது புதிய நண்பர்கள் கிடைப்பார்களோ என்ற ஏக்கம் நமக்கும் தொற்றுகிறது.
ஒரே ஊரில் பள்ளி மாற்றும் போதே குழந்தைகள் சந்திக்கும் சிக்கல்கள் நிறைய. பெரும்பாலும் குழந்தைகளைக் கேட்டு நாம் அந்த மாற்றத்தினை கொண்டு வருவதில்லை. பெரியவர்களின் முடிவு தான். வசிக்கும் வீட்டை மாற்றும் போதும் குழந்தைகள் அவர்களின் ஏக்கத்தினை சொல்வதற்குக் கூட நம்மில் பலர் வாய்ப்பு அளிப்பதில்லை. ஊர் மாறுவதும், பள்ளி மாறுவதும் குடும்பச்சூழ்நிலை போன்ற பல காரணங்களால் என்றாலும், குழந்தைகள் தங்களின் எண்ணங்களை வெளிப்படுத்தவாவது குறைந்தபட்சம் இடம் கொடுக்கலாம். கிரியின் வலியை நமக்கு கடத்துவதன் மூலம், அப்புத்தகத்தை வாசிக்கும் பெற்றோர்கள் எந்தவொரு மாற்றத்தினை முன்வைக்கும் போதும் குழந்தைகளின் எண்ணங்களுக்கு மதிப்பு அளிப்பார்கள் என்றே நம்புகிறேன்.
நிறைய மொழி கற்றுக்கொள்வது நல்ல விஷயம் என்று நாம் கருதுவதுண்டு. கிரி தான் செல்லும் ஊரின் மொழிகளைக் கற்றுக் கொண்டாலும் அதனால் அவனுக்கு பெருமை ஏதும் இல்லை என்பது நாம் பேச வேண்டிய கருபொருள். எதற்காக, எப்போது, எப்படி கற்றுக் கொள்கிறோம் என்பதை பொருத்தே ஒரு மொழியினை கற்ற திருப்தி கிடைக்கும். கட்டாயத்தின் பேரிலோ, வேறு வழியில்லாமலோ, சூழல் கைதியாகவோ கற்றுக்கொள்வது ஒருவருக்கு எந்த மகிழ்ச்சியினையும் அளிக்கப்போவதில்லை என்ற உண்மையை சொல்கிறது கிரியின் கதை.
