Tuesday, October 17, 2023

தோழர் & Politics

தோழர் & Politics - இந்த இரண்டு வார்த்தைகளும் சமீபத்தில் என்னை சிந்திக்க வைத்தவை. இரண்டுமே 'நல்ல' வார்த்தைகள் தாம். ஏனோ சில நெருடல்கள் எனக்குள் எழுந்துள்ளன. அதை லேசாக பகிரும் பதிவு தான் இது.

தோழர்

என் சிறு வயதில் அடுத்த வீட்டில் வசித்த ஒரு அண்ணா, அக்கா தன்னைவிட வயதில் மூத்த என் அம்மாவை 'சகோ' என அழைத்தது தான் இவ்வாறான மாற்று வார்த்தை உண்டு என நான் அறிந்த நேரம். வினோதமாக இருக்கும். பின்னர் அன்பே சிவம் என்ற திரைப்படத்தில் இடதுசாரியினராகவும், முற்போக்கு சிந்தனைவாதிகளாகவும் இருந்த வீதி நாடகக் கலைஞர்கள் ஒருவரையொருவர் 'சகா' என அழைத்தது அந்த வயதில் தனித்துவமாகத் தெரிந்தது. மேற்படிப்பு நாட்களில் "தோழர்" என்ற வார்த்தையை நிறைய கேட்க/படிக்க நேரியது. ஏனோ இந்த வார்த்தை இடதுசாரி கட்சிகளுடையது என என் மனதில் பதிந்துவிட்டது. தற்போது சமூக செயற்பாட்டுகளில் இருக்கும் போது சிலர் நம்மை தோழர் என்று அழைப்பதுண்டு.  அது எனக்கு வினோதமாகவும், கூச்சத்தை ஏற்படுத்துவதாகவும் இருக்கும். நாம் இடதுசாரி கட்சியை சேர்ந்தவரில்லை, நாத்திகவாதியும் இல்லை, முற்போக்கு இயக்கங்களிலும் இல்லை, சமூக செயற்பாட்டிற்காக முழு உழைப்பை போடுபவரும் இல்லை. இப்படி எந்த கட்டமைப்புக்குள் இல்லாதவராக இருந்தும் ஏன் ஒருவர் என்னை "தோழர்" என்று அழைக்கவேண்டும் என்ற கேள்வி எழுந்தது. ஒரு வேளை சே குவேரா அவர்கள் சொன்னது போல் சமூக கொடுமைகளை கண்டு ஆவேசம் கொள்வதால் நம்மையும் "தோழர்" என்று அழைக்கிறார்களோ?

 கலையகம்: #தோழர் - அரச அதிகாரத்தை அசைத்த பழந்தமிழ் வார்த்தை

அதனால் "தோழர்" என்ற வார்த்தையின் வரலாற்றினை தெரிந்து கொள்ள நினைத்தேன். ஃப்ரெஞ்ச் (French) நாட்டில் இருந்த மன்னர்களின், அதிகாரிகளின் அடைமொழிகளைக் (Titles) களைவதற்கு இது போன்ற வார்த்தைகள் முதலில் புழக்கத்தில் வந்துள்ளன. பின்னர் ரஷ்யாவில் புரட்சியின் போது "காம்ரேட்" (Comrade) என்ற வார்த்தை உருவாகியுள்ளது. இது போன்ற வார்த்தைகள் நாடுகளின் புரட்சிகளின் போது "காம்ரேட்" என்பதைத் தழுவி உருவாகி புழக்கத்தில் இருந்துவருகின்றன. அதன் ஒரு தழுவல் தான் "தோழர்" என்ற வார்த்தை. 

இவ்வார்த்தை தமிழ் இலக்கியங்களில் இருந்துள்ளது. 1000 வருடங்களாக இவ்வார்த்தை பயன்பாட்டில் உள்ளது என தெரிய வருகிறது. 'நட்பு' என்ற அர்த்தம் கொண்ட இந்த வார்த்தை தமிழக அரசியலில் பெரும் பங்கு வகித்துள்ளது. இவ்வார்த்தையினை முதன்முதலாக திரு.வி.க. அவர்கள் பயன்படுத்தியுள்ளதாக தெரிகிறது. ஒரு அரசியல் பொற்பொழிவினை மொழிபெயர்க்கையில் இவ்வாறு உபயோகித்துள்ளார். பெரியார் அவர்களும் இவ்வார்த்தியினை களப்பணியாளர்கள், தலைமைகள் என அனைவரும் பயன்படுத்த வேண்டும் என கூறியிருக்கிறார். தன்னையும் தோழர் என்றே அழைக்க வேண்டும் எனவும் தெரிவித்திருக்கிறார். தலைமைக்கும், தொண்டர்களுக்கும் எந்தவித வித்தியாசமும் இல்லாமல் ஒரு கட்சி/ஒரு அமைப்பு செயல்பட வேண்டும் என எண்ணி அவ்வார்த்தை உபயோகப்படுத்தப்பட்டிருப்பது தெரியவருகிறது. அவ்வார்த்தைக்கு தனி மரியாதையும், பதவியில் உள்ளவர்களுக்கு ஒரு அச்சத்தினையும் ஏற்படுத்தக் கூடியதாக இருந்துள்ளதை வரலாறு தெரிவிக்கிறது. ஒரு இலக்கை நோக்கி பயணிக்கும் அனைவரும் (அனைத்து படிநிலையும்) சமம் என வெளிப்படையாக தெரிவிக்கும் ஒரு மாபெரும் கருவியாக "தோழர்" என்ற வார்த்தை பயன்படுகிறது என கற்றுக்கொண்டேன்.

இன்று இவ்வார்த்தை பொதுவெளியில் பயணிக்கும் பலரும் பயன்படுத்தும் வார்த்தையாக உள்ளது என தோன்றுகிறது. ஒருவரின் அடையாளம் என்ன, சித்தாந்தம் என்ன அறிந்து கொள்ளாமல், மேலோட்டமாக தெரிந்த நபரை "தோழர்" என்று அழைப்பது, மற்றொருவரை எவ்வாறு அழைப்பது என்ற குழப்பத்தில் "தோழர்" என குறிப்பிடுவது, அவ்வார்த்தியினை பயன்படுத்துவதில் ஒரு செல்வாக்கு உள்ளது என காட்டிக்கொள்ள பயன்படுத்துவது, செயற்கையாக பயன்படுத்துவது என இந்த வார்த்தையானது தன் வலிமையை இழக்கிறதோ என தோன்றுகிறது. இவ்வார்த்தையின் அர்த்தம் நீர்த்துப்போகிறதோ என எண்ணம் உண்டாகிறது. 

அவ்வார்த்தை வழக்கொழிந்து போய்விடக்கூடாது என்பதால் அதிகமாக பிரயோகிக்கப்படுகிறது என்ற வாதமும் இருக்கலாம். எங்கள் அளவில் நாங்கள் தோழர்களே என்ற வாதமும்  வைக்கலாம். எப்படியுமே அடுத்தவர் அவ்வாறு அழைக்கப்படுவதை விரும்புகிறாரா என்று தெரிந்துகொள்ளுதல் அவசியம் என்பது என் கருத்து. இவ்வார்த்தியின் வரலாறு இதன் வீரியத்தைக் காட்டுகிறது. அரசியலை ஆட்டிப்படைக்க வல்லமை கொண்ட வார்த்தை என புரிந்துகொள்ள முடிகிறது. அதனை குறைத்து எடைபோடும் எந்த தகுதியும் எனக்கில்லை. எனினும் நம்மோடு பழகுபவர் அனைவரும் நமக்கு "தோழமை" ஆகிவிட முடியாது என்ற அடிப்படை வாதத்தினைக் கொண்டு இவ்வார்த்தை பிரயோகிக்கப்பட்டால் நலம் என்பது என் புரிதல். அவ்வாறு நடத்தல் அவ்வார்த்தையின் வீரியத்தை தக்க வைக்கும் என தோன்றுகிறது. இதற்கு மாற்று சொல் இருந்தாலும் தெரிந்துக்கொள்ள விரும்புகிறேன். 💖

7 comments:

yuvaraj said...

மிக அற்புதமான தெளிவுரை தந்ததற்கு நண்பர் (தோழி). பிரியா அவர்களுக்கு நன்றி. எத்தனை தோழர்களுக்கு இந்த வரலாறு தெரிந்திருக்க கூடும் என்பது ஐயம் தான்.

என்னளவில் நான் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தை "கண்ணு". இதன் மூலம் நான் பிறரோடு நெருங்கி (கருத்தில், மொழியில் மட்டுமே) இருப்பது போல உணர்கிறேன்.

மேலும் என் மகளை முதலில் "பட்டு" என் கொஞ்சலாக கூப்பிடுவது வழக்கம். இதனை ரசித்த பல நண்பர்கள் பட்டு என்ற சொல்லினை அவர்களும் பரவலாகப் பயன்படுத்துவதைக் கண்டு மகிழ்கிறேன்.

யுவராஜ்

Pryashares said...

பகிர்ந்தமைக்கு நன்றி 😊

Maharajan said...

நண்பன் 😄

Maharajan said...
This comment has been removed by the author.
Pranav Narayan said...

"தோழர்"( Comrade )என்பது கேரளாவில் அதிகம் கேட்கப்படும் வார்த்தை. இந்த வார்த்தையின் அர்த்தம் தெரியாமல் பலர் பயன்படுத்துகிறார்களோ என்ற சந்தேகம் உள்ளது. ஆனால் இன்று வரை அதன் வரலாறு தெரியாது, இன்று தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சி
ஆசிரியர் நன்றாக கூறியுள்ளார்.
புதிய அறிவை தந்ததற்கு நன்றி ♥️


பிரணவ் நாராயணன்.கே

Pryashares said...

Thank you Pranav :)

Pryashares said...

🤝🏼

யாருடைய துகள் நாம்?

"சீதக்காதி" திரைப்படத்தில் வருவது போன்று "கலைக்கும் கலைஞனுக்கும் மரணமில்லை" தான். அதே போன்று நம் முன்னோர்களுக்கும் மரணமி...