Monday, December 2, 2024

பள்ளி பைக்குள் கதை புத்தகம் 😍

எனக்கும் என் மகளுக்கும் அவ்வப்போது யார் வேகமாக புத்தகத்தினை படித்து முடிக்கிறார்கள் என்ற போட்டி நடப்பதுண்டு. அது போன்று நேற்று ஒரு போட்டியை துவங்கலாம் என முடிவு செய்து ஆளுக்கு ஒரு புத்தகத்தை தேர்ந்தெடுத்தோம். எவ்வளவு பக்கங்கள், கதையா நாவலா, யார் எழுதியது, எதை பற்றியது என ஏராளமான உரையாடலுக்குப் பின் அவரவர் புத்தகத்தை எடுத்துக் கொண்டோம். 

 kids reading books Stock Vector Image & Art - Alamy

இன்று காலை நான் என் புத்தகத்தை மாற்றிக் கொள்ள போகிறேன் என்று சொன்னவுடன் அவளும் வேறு புத்தகத்தை தேடத் துவங்கினாள். நான் ஒரு புத்தகத்தை எடுத்தவுடன் "எனக்கு 'கால் முளைத்த கதைகள்' புத்தகம் எடுத்துக் குடு மா" என்று கேட்டாள். எடுத்துக் கொடுத்தேன். பின்னர் என் புத்தகத்தை பார்த்துவிட்டு "நீ உன் ஆஃபீஸுக்கும் புக் எடுத்துட்டு போவியா? அப்படீனா நீ ஃபர்ஸ்ட் முடிச்சிடுவியே!?" என்று கேட்டாள். அலுவலகத்தில் நேரம் கிடைத்தால் அங்கு வேறு புத்தகம் தான் வாசிப்பேன் என்றும் வீட்டில் வந்து தான் போட்டி புத்தகத்தை வாசிப்பேன் என்றும் சொன்னேன். 

உடனே அவள் "எனக்கு ஒரு பெரிய கதை எடுத்து குடுமா" என்று கேட்டாள். நான் 'சாக்ரடீஸின் சிவப்பு நூலகம்" என்ற புத்தகத்தை எடுத்து கொடுத்தேன். அவள் அதை பள்ளி பைக்குள் வைத்துக் கொண்டு, "இது ஸ்கூலில் படிக்க, அது வீட்டில் படிக்க" என்றாள். 

விவரிக்க முடியாத மகிழ்ச்சி என்னை தொற்றிக்கொண்டது. 💝

பின் குறிப்பு: 

(1) ஏனோ அவளுக்கு எஸ்.ரா வின் புத்தகங்கள் மிகவும் பிடிக்கின்றன.

(2) பள்ளி நூலகத்தில் அவளுக்கு "நுழை" பிரிவின் (Reading Level 1) நூல்கள் மட்டுமே வழங்கப்படுகின்றன என வருத்தம்.

டோமோயி நூலகம் உருவான கதை :-)

 1

சிறு வயதில் என் தந்தை ஞாயிற்றுக்கிழமைகளில் காஞ்சிபுரம் மாவட்ட நூலகத்திற்கு கூட்டிச்செல்வார். நான் எந்த பிரிவுக்கு செல்ல வேண்டும் என்று அவர் எதுவும் சொன்னதில்லை. உனக்கு பிடித்த பிரிவுக்கு செல் என்று சொல்லிவிட்டு அவருக்கு விருப்பமான புத்தகத்தை எடுக்கச்செல்வார். நூலகரின் உதவியை கேட்கத் தோன்றியதில்லை. ஆதலால் ஏதோ ஒன்று என புத்தகத்தை எடுத்து வருவேன்.  எடுத்த அனைத்து புத்தகங்களையும் முழுமையாக வாசித்தேனா என்றால் இல்லை.

நான் பயின்ற பள்ளியில் பெயருக்கு ஒரு நூலகம் இருந்தது. அவ்வப்போது என் தலைமையாசிரியரிடம் நூலகம் செல்ல அனுமதி கேட்டதும், அங்குள்ள புத்தகங்களை அடுக்கியதும், நூலகம் செல்ல பிரத்யேக நேரத்தை ஒதுக்கி கேட்டதும் நினைவில் உள்ளது. பொது அறிவு புத்தகங்களே இருந்தன என்பதும் ஞாபகத்தில் உள்ளது. அப்புத்தகத்திலுருந்து பொது அறிவு வினாடி வினா காலை கூட்டத்தில் நடத்த கோரியதும் நான் ஒரு ஆர்வக்கோளாறாக இருந்துள்ளேன் என்பதும் இன்று நினைத்துப் பார்க்கையில் சற்று கூச்சத்தை ஏற்படுத்துகிறது.

நான் கல்லூரி படித்துக்கொண்டிருந்த போது தன்னார்வலராக பணிபுரிந்த இடங்களில் நூலகங்களை அமைப்பதை ஒட்டி உரையாடுவதில் ஆர்வம் காட்டியுள்ளேன். மேலும் அங்கெல்லாம் புத்தகங்களை பரிசாக வழங்கி நூலகங்கள் அமைக்க வலியுறுத்தியுள்ளேன். தெரிந்த, தெரியாத அரசு பள்ளிகளுக்கும் கூட.

எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கும் இன்னொரு விஷயம், என் மகள் பிறந்த உடன் எங்கள் அறையின் ஒரு மூலையில் ஒரு சிறிய திறந்த cupboard வைத்து வண்ண புத்தகங்கள் சிலவற்றை அதில் அடுக்கி எங்கள் மகளின் முதல் நூலகம் என்று சொல்லி வந்தேன்.

தொடர் வாசிப்பில் இருக்கிறேனோ இல்லையோ, நூலகங்களுக்கு செல்வது, வித்தியாசமான நூலகங்களைப் பற்றி இணையத்தில் தேடுவது, வீட்டில் நூலகம் அமைப்பது என நூலகம், புத்தகம் தொடர்பான ஏதோ ஒரு ஆர்வம் ரொம்ப காலமாக இருந்துள்ளது. நிறைய படித்திருக்கேனா என்றால் இல்லை. ஆனால் நிறைய படிக்க வேண்டும் என்ற ஆசை அன்று முதல் இன்று வரை உண்டு. முயற்சி செய்தும் வருகிறேன்.

2

2010-2011 காலக்கட்டத்தில் தினமும் இரயிலில் பயணம் செய்து படிக்கச்செல்லும் போது என்னுடன் ஒரு அரசு சாரா அமைப்பில் தன்னார்வலராக பணியாற்றிய ஒரு நண்பரும் அதே இரயிலில் தினமும் வேலைக்கு செல்வதை அறிந்தேன். அப்போது நாங்கள் இருவரும் எங்களிடம் இருக்கும் புத்தகங்களை மாற்றிக்கொள்வோம். இருவரும் அப்புத்தகங்களை படித்து முடித்தவுடன் மாற்றிக்கொண்டு புதிய புத்தகங்களை பரிமாறிக்கொள்வோம். அவ்வாறு அவரிடமிருந்து 2011ல் அறிமுகமாகியது தான் எனக்கு இன்று வரை மனதிற்கு நெருக்கமான “டோட்டோ-சான்” என்ற புத்தகம்.

இரயிலில் அப்புத்தகத்தை படித்துக்கொண்டே நான் இறங்க வேண்டிய நிலையத்தைத் தாண்டி சென்றது அதுவே முதலும், கடைசியுமாகும். அப்படி ஒரு தாக்கத்தை அந்த புத்தகம் ஏற்படுத்தியது. அதற்கு பிறகு அப்புத்தகத்தை பல முறை முழுமையாகவும், இங்குமங்குமாகவும் வாசித்திருக்கிறேன். இன்று வரை.

அப்புத்தகத்தை படித்த காலக்கட்டத்தில் வார இறுதி நாட்களில் வேலூர் பகுதியில் ஒரு அரசு சாரா அமைப்பு நடத்தி வந்த கிராமப்புற பள்ளியில் தன்னார்வலராக பணியாற்றினேன். அப்பள்ளியில் நாம் கொண்டுவர நினைக்கும் நல்ல முன்மாதிரிகளை பரிசோதித்துப் பார்க்க தடையேதும் இல்லாத சூழல் இருந்தது. டோட்டோ-சானை படித்துவிட்டு அப்புத்தகத்தில் வரும் டோமோயி பள்ளியின் செயல்பாடுகளை இப்பள்ளியில் செய்து பார்க்க ஆசைப்பட்டு சிலவற்றை முயற்சி செய்தது நினைவிருக்கிறது.

டோமோயி பள்ளி ஒரு கனவுப் பள்ளி. இவ்வாறு நமக்கு கிடைக்கவில்லையே என்ற ஏக்கம் எனக்கு உண்டு. தெரிந்தோ தெரியாமலோ என் மகளுக்கும் டோமோயி பள்ளியின் தலைமையாசிரியரை மிகவும் பிடித்துவிட்டது.; எனக்கு இருந்தது போன்ற ஏக்கமும் தொற்றிக்கொண்டுள்ளது.

மகளை பள்ளியில் சேர்க்க நினைத்த போது, டோமோயி போன்ற பள்ளி நம் அருகமையில் இல்லையே என்றும், அது போன்ற பள்ளியை நிறுவும் அளவுக்கு நமக்கு வசதி வாய்ப்பும் இல்லையே என்றும் நினைக்கத் தோன்றியது.

டோமோயி பள்ளியின் சாயல் சிறிதளவேனும் உள்ளது அரசு பள்ளியில் மட்டும் தான் எனவும் நாம் முயன்றால் டோமோயி பள்ளியின் சிறப்பு அம்சங்களை அரசு பள்ளிகளில் முயற்சி செய்து பார்க்க இயலும் என்ற நம்பிக்கையில் எங்கள் மகளை அரசு பள்ளியில் சேர்த்துள்ளோம்.

 

 Totto-Chan: The Little Girl at the Window Book by Tetsuko Kuroyanagi –  Bookowls

 3

நூலகங்களின் மேல் இருந்த ஒரு பிணைப்பும், குழந்தைகள் (எனக்கு பெரியவர்களோடு அவ்வளவாக set ஆவதில்லை) புத்தகங்கள் வாசிக்க வேண்டும் என்ற ஆசையும், டோமோயி மேல் இருந்த காதலும், ஏக்கமும் எனக்குள் சேர்ந்திருந்தது. முக்கியமாக கிராமங்களிலும், அரசு பள்ளிகளிலும் உள்ள குழந்தைகளுக்கு டோமோயி போன்ற அனுபவத்தை சிரிதளவேனும் கொடுக்க வேண்டும் என்ற ஆசை. தனியார் பள்ளிகளுக்கு செல்லும் குழந்தைகளுக்கு வாய்ப்புகள் நிறைய வாய்க்கப்பெற்றுள்ளன. ஆனால் அரசு பள்ளி மாணவர்களுக்கு அவ்வாறு இல்லை என்பது என்னுள் அசைக்க முடியாத எண்ணம். ஆனால் அவ்வாறு கிராமத்திலோ, அரசு பள்ளிகளிலோ நாம் நினைப்பது போன்று பணி செய்ய வேண்டும் என்றால் நமக்கான ஒரு இடத்தை உருவாக்க வேண்டும். ஏனெனில் நம் மனதில் ஓடும் எண்ணங்கள் பொதுபுத்தியிலிருந்து மிகவும் மாறுபட்டது. எனவே டோமோயில் உள்ளவாறு குழந்தைகளுக்கு ஒரு சுதந்திர வெளி. அவ்வாறான ஒரு இடம் புத்தகங்களோடு இருந்தால் சரியாக இருக்கும் என்று தோன்றவே திருநெல்வேலி மாவட்டம், வல்லவன்கோட்டை கிராமத்தில் 2022 ஏப்ரல் மாதத்தில் டோமோயி நூலகம் திறக்கப்பட்டது. வாடகைக்கு ஒரு சிறிய வீட்டினை கொண்டு நூலகம் செயல்பட்டது. வாசிப்பைக் காட்டிலும் குழந்தைகள் மகிழ்ச்சியாக விளையாடிய நாட்களே அதிகம். சுற்றுலா செல்வது, பயிலரங்குகள் நடத்துவது, கதைகள் பேசுவது, கொஞ்சமாக புத்தகம் வாசிப்பது என இரண்டு ஆண்டுகள் ஓடின.

பல்வேறு காரணங்களால் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அக்கிராமத்தில் தொடர முடியாமல் போனதால், எங்கள் மகள் படிக்கும் அரசு பள்ளிக்கு அருகில் ஒரு கடையினை வாடகைக்கு எடுத்து தற்போது மூன்று மாத காலமாக டோமோயி நூலகம் செயல்பட்டு வருகிறது. என்ன பெயர் இது என்று கேட்பவர்களிடம் டோட்டோ-சானையும் டோமோயியையும் கொண்டு சேர்ப்பதை ஒரு குஷியான வேலையாக செய்து வருகிறோம், குடும்பமாக!!!


பின் குறிப்பு: இதை எழுதத் தூண்டிய சண்முகவடிவு அக்காவிற்கு நன்றிகள்!

Tuesday, October 29, 2024

மகாவிஷ்ணு என்பவரால் ஏற்படும் மன உளைச்சல்

பரம்பொருள் என்ற அமைப்பின் நிறுவனர் மகாவிஷ்ணு என்பவரால் ஏற்பட்ட பிரச்சனை நாம் அனைவரும் அறிந்ததே. அவரை கண்டிப்பது, கைது செய்வது என்பதெல்லாம் ஒரு பக்கம்.

இன்னொரு பக்கம் அவரின் பேச்சினை ஏற்பாடு செய்த பள்ளி தலைமையாசிரியர்களின் பணியிட மாற்றம். 

அரசு பள்ளிகள் நிரந்தரமாக மூடப்பட்டு விடக்கூடாது என்றும் அப்பள்ளிகளில் கல்வித்தரம் உயர வேண்டும் என்றும் மனதார நினைப்பவர்கள் ஒரு சிலரே. மேற்குறிப்பிட்ட மகாவிஷ்ணு பிரச்சனையால் பள்ளிகளின் நலன் கருதி பணியாற்றிய பள்ளி தலைமையாசிரியர்கள் இப்போது தைரியமாக புது முயற்சிகளையும் முன்னெடுப்புகளையும் எடுக்க விரும்புவதில்லை. யாருக்குத்தான் திடீர் பணியிட மாற்றம் ஏற்புடையதாக இருக்கும்?! அதிலும் ஏதோ நல்லது செய்யலாம் என்று எண்ணுபவர்கள் இவ்வாறு தாக்கப்படும் சூழல் இருந்தால்! பணி செய்ய விரும்பாத பள்ளி ஆசிரியர்களுக்கு இப்பிரச்சனை ஒரு சாக்காக உள்ளது, அப்பாடா எதுவும் செய்யாமல் தப்பிக்க ஒரு காரணம் கிடைத்துவிட்டது என்று.

பள்ளியின் மேலதிகாரியின் அனுமதியுடன் நிகழ்வுகளை நடத்தலாம் என்றால், பள்ளி வளர்ச்சியில் அக்கறை உள்ள ஒரு சிலரே அனுமதி அளிக்கின்றனர். மற்றவர்கள் பாடத்தைத் தவிர வேறெதுவும் செய்யாதீர்கள், யாரையும் பள்ளிக்குள் அனுமதிக்காதீர்கள் என்று அதிகாரத் தோரணையுடன் கூறுகிறார்கள். அதிலும் ஒன்றிய, மாவட்ட அலுவலர்கள் என அதிகாரத்துவத்தின் தட்டுகள் பல இருப்பதால், ஒரு கடிதத்திற்கு பதில் கிடைப்பதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடுகிறது.

மகாவிஷ்ணுவை கைது செய்வது என்று இருந்தாலும், பள்ளி தலைமையாசிரியரை கண்டித்து இது போன்ற தவறு நிகழாமல் பார்த்துக்கொள்ள சொல்லியிருக்கலாம்.  பணியிட மாற்றம் என்பது அவசர கதியில், ஊடகங்களுக்காக செய்யப்பட்டதாகவே தோன்றுகிறது.

அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு தனியார் பள்ளிக்கு இணையான வாய்ப்புகள் கிடைக்க நாம் அரசு பள்ளிக்குள் நுழைய வேண்டியது அவசியம் என்று நானும் என் கணவரும் கருதியதால், அதற்கான வழி நம் பிள்ளையை அரசு பள்ளியில் சேர்ப்பது என்று முடிவெடித்தோம். அதன்படியே சேர்த்துள்ளோம். அவ்வாறே ஒரு பள்ளியின் நம்பிக்கையை இயன்றெடுக்க முடியும் என்று நினைத்தோம். ஆனால் மகாவிஷ்ணு பிரச்சனைக்குப் பிறகு ஒரு அடி எங்களால் நகர இயலவில்லை. எந்த நிகழ்ச்சி செய்யவும் அனைவருக்கும் பயம். எங்கள் பள்ளி ஆசிரியர்களை குற்றம் சொல்லமாட்டேன். எங்கள் மகள் சரளமாக தமிழும் ஆங்கிலமும் வாசிப்பதும், பாடங்களில் சிறப்பாக இருப்பதும், அனைவரிடமும் மரியாதையாகவும், அன்பாகவும் இருப்பது அப்பள்ளியினாலும், ஆசிரியர்களால் மட்டுமே. ஆனால் யாரோ ஒருவர் செய்த தவறினால் பாதிக்கப்படுவது வேறு யாரோ.

மகாவிஷ்ணு மீதும் நிகழ்வை ஒருங்கிணைத்த ஆசிரியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுத்துக்கொண்டே இருந்த பலர் அடுத்து என்ன? இனி பள்ளிகளில் எவ்வாறு இதை முன்னெடுக்கலாம்? என்பதற்கு நெருக்கடி தராமல் இருப்பது நியாயமில்லை. காலம் பொன் போன்றது என்பதை மறந்துவிடுகிறோம்.

என்னை போன்ற சிலருக்கு மன உளைச்சலே மிச்சம்!!!

Wednesday, September 18, 2024

மரத்தடியில் வகுப்பறை 🌳

நான் பள்ளியில் பயின்ற காலக்கட்டத்தில் அரசு பள்ளிகளில் மரங்களின் நிழலில் பாடம் எடுத்தது தினசரி வாடிக்கையான விஷயம் தான். அரசு பள்ளிகளில் போதுமான வகுப்பறை வசதிகள் இருந்ததில்லை. ஒரே அறையினை இரண்டு மூன்று தடுப்புகளாக பிரித்து பல வகுப்புகள் எடுக்கப்பட்டன. மேலும் அன்றைய அரசு பள்ளி வளாகங்களில் மரங்களும் நிறைய இருந்தன. 

UNICEF Education on X: "Welcome to my Classroom under a tree! This outdoor  classroom at a primary school, #Malawi, is not by choice. In many rural  schools, lack of classrooms drive students

                             Pic courtesy: UNICEF           

அக்காலக்கட்டத்தில் இருந்த தனியார் பள்ளிகளுமே விருப்பப்படும் ஆசிரியர்கள் தங்கள் வகுப்புகளை மைதானத்தில், மரத்தடியில் எடுக்க அனுமதித்தது. எனது பள்ளியிலும் பல வகுப்புகள் அவ்வாறு எடுக்கப்பட்டன. அவ்வகுப்புகள் பெரும் குதூகலத்தை வழங்கியது என்றால் மிகையாகாது. அதற்கு முக்கிய காரணம் தினமும் 8 மணி நேரமும் ஒரே வகுப்பில், ஒரே இருக்கையில் அமர்ந்து பாடம் கவனித்ததில் ஏற்பட்ட சலுப்பு தான். வெட்டவெளியில், காற்றோட்டமாக, மர நிழலுல், வேடிக்கைப் பார்த்துக்கொண்டே அமர்ந்து, தரையில் உள்ள மண்ணில் ஏதேனும் வரைந்துக்கொண்டே, முடிந்த அளவு பாடம் கவனிப்பதில் இருந்த ஒரு அலாதியான ஃபீல் தான்.

இன்றைய குழந்தைகளுக்கு இது கிடைப்பதில்லை என்ற வருத்தம் எனக்கு உண்டு. தனியார் பள்ளி பெற்றோர்களோ தம் பிள்ளைகளை சாதாரண வகுப்பறையிலிருந்து குளிரூட்டப்பட்ட வகுப்பறைகளுக்கு  அனுப்புவதற்கான வழிகளை ஆராய்கின்றனர். அரசு பள்ளி பெற்றோர்களோ தம் பிள்ளைகள் வெட்டவெளியில் பயில்வது தனியார் பள்ளிக்கு பிள்ளைகளை அனுப்ப முடியாத "தங்கள் இயலாமையை" ஊர் அறியச் செய்வதாக எண்ணுகின்றனர். உலகளவில் கொரோனா காலக்கட்ட ஊரடங்கிற்கு பிறகு மாணவர்களை வகுப்பறைக்குள் முழு நாளும் அடைத்து வைக்காமல் வெளியில், மரங்கள் உள்ள இடங்களில் அமர வைத்து வகுப்புகள் எடுக்குமாறு பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. குழந்தையின் உடல் நலத்திற்கும் வெளிப்புற வகுப்புகள் சிறந்தது என்பதற்கு இது ஒரு சான்று.

சமீபத்தில் ஒரு நாள் மரத்தடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஒரு நிகழ்வினை செய்திருந்தோம். நெருக்கமானவர்கள், இவ்வாறு செய்யாதீர்கள் என்றும் பெற்றோர்கள் மரத்தடியில் தங்கள் பிள்ளைகள் உட்கார்ந்திருப்பதை விரும்பமாட்டார்கள் என்றும் எங்கள் மீது உள்ள அக்கறையில் சொன்னார்கள். வருத்தமாக இருந்தது. இயற்கையோடு அமர்ந்து குழந்தைகள் கற்பதில் உள்ள உளவியிலையும் மகிழ்ச்சியையும் எவ்வாறு எடுத்துரைப்பது?! குழந்தை வேடிக்கை பார்க்கத்தான் செய்யும். சுவர்கள் கொண்ட வகுப்பறையிலும் குழந்தைகளுக்கு இயல்பான கவனச்சிதறல்கள் இருக்கத்தானே செய்கிறது.

இன்று சில பள்ளிகள் இயற்கையோடு கற்பிப்பதன் விளைவுகளை உணர்ந்து, அதற்கு "பசுமைப்பள்ளி", "இயற்கையோடு கல்வி" என விதவிதமான பெயர்களிட்டு அவ்வாறு செய்தும் வருகின்றனர். எனினும் அப்பள்ளிகள் "மாற்றுப் பள்ளிகள்" என அறியப்படுகின்றன. குழந்தைகள் குறித்தும், கல்வி குறித்தும் எழுதியவர்கள், செயற்பாட்டாளர்கள், கல்வியாளர்கள் அனைவரும் அகன்ற வானத்தினை கூரையாகக் கொண்டு, தன் சுற்றுச்சூழலை வகுப்பறையாகக் கருதுவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்துள்ளனர். இதனை வெகுஜென மக்களிடமும், இன்றைய பள்ளி ஆசிரியர்களிடமும் கொண்டு செல்வதுதான் சிரமமாக உள்ளது.

Friday, May 10, 2024

விசித்திரமான அருங்காட்சியகங்கள் 🎊

சென்னை வாசிகளால் எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியகம் பரவலாக 'செத்த college' என்று அழைக்கப்படும். நம் ஊரில் அருங்காட்சியகம் பார்க்கப்படும் பொதுப்பார்வையாக இதை கருதலாம். உயிரற்ற பொருட்கள் குவிக்கப்பட்டுள்ள இடமாகவும், கடந்த காலத்தில் என்ன உள்ளது என்ற எண்ணமும் ஒரு சேர உருவான இடமாக அருங்காட்சியகம் நம்மில் பலரால் எண்ணப்படுகிறது.

எனினும் புத்தகக்கண்காட்சியில் சுபாஷினி என்பவரின் படைப்பு "உலக அருங்காட்சியகங்களினூடே ஒரு பயணம்" கண்ணில் தென்பட்டவுடன் வாசிக்கத் தூண்டியது. நாங்கு பகுதிகளாக வெளிவந்த இத்தொகுப்பில் முதல் பகுதியை மட்டும் வாசித்துள்ளேன்.

 உலக அருங்காட்சியகங்களினூடே ஒரு பயணம் (தொகுதி - 1) - Aazhi Books 

உலகின் பல பகுதிகளில் உள்ள பிரம்மாண்டமான, வரலாற்றுச் சிறப்புமிக்க, ஆச்சரியமான, சுவாரஸ்யமான அருங்காட்சியங்கள் பற்றிய தொகுப்பாக இந்த நூல் உள்ளது. இலங்கையின் தேயிலை தொழிலாளர்கள், கடல் ஆய்வு, வாசனை திரவியங்கள், பூமிக்கடியில் அமைக்கப்பட்டுள்ள உப்புச் சுரங்கம், பண்டைய மக்களின் வாழ்க்கையை சித்தரிப்பது என பலதரப்பட்ட அருங்காட்சியங்களின் விவரங்கள் இதில் உள்ளன. வரலாற்றின் மீது பெரிய ஈடுபாடு இல்லாதவர்களுக்கும் புது ஈடுபாட்டினை இப்புத்தகம் உருவாக்கக்கூடும் என நினைக்கிறேன். அருங்காட்சியங்களுக்குள் செல்வதற்கான வழித் தொடங்கி, நுழைவுச்சீட்டு விபரங்கள், அனுமதி நேரம், நெரிசல் என அனைத்து தகவல்களும் ஒவ்வொரு அத்தியாயத்திலும் உள்ளன. கூடுதலாக அருங்காட்சியங்களின் முழு விலாசமும் ஆசிரியர் வழங்கியுள்ளார்.

இப்புத்தகத்தில் என்னை மிகவும் கவர்ந்தவை 🎉

(1) தென் ஆப்பிரிக்காவில் உள்ள மகாத்மா காந்தி அருங்காட்சியகம்

(2) பர்மா-சியாம் மரணப்பாதை அருங்காட்சியகம், தாய்லாந்து

(3) வதை அருங்காட்சியகம், செக் குடியரசு

(4) உடைந்த உறவுகள் அருங்காட்சியகம், குரோஷியா

இதிலும் எனக்கு மிகவும் வித்தியாசமாக தெரிந்தது குரோஷியாவில் உள்ள "உடைந்த உறவுகள் அருங்காட்சியகம்." மற்ற அனைத்தும் கடந்த காலத்தை உறைய வைத்த, இனி கூடுதலாக இணைக்க வேண்டிய அவசியம் இல்லாதவை. பார்வையாளர்கள் பார்வையாளர்களாக மட்டுமே இருக்கக்கூடியவை. 

ஆனால், "உடைந்த உறவுகள் அருங்காட்சியகம்" உலகில் சம காலத்தில் உள்ளவர்களால் இயங்கி வருகிறது. உலகின் எந்த மூலையில் இருந்தும், உறவுகளால் தன் இதயம் வலி கண்டிருந்தாலும், அவ்வுறவினை மறக்கவும், உடைந்த உறவுகளை திரும்பிப் பார்க்க வேண்டாம் என எண்ணுபவர்கள் எவரும் அந்த உறவினை நினைவுப்படுத்தக்கூடிய எந்த பொருளையும், ஒரு குறிப்புடன் இங்கு அனுப்பி வைக்கிறார்கள். அவைகளால் ஆனதே இந்த அருங்காட்சியகம். மனித உறவுகளுக்காக மட்டுமே இந்த அருங்காட்சியகம் என்பது எனக்கு சிலிர்ப்பாக இருந்தது.💞

இந்த புத்தகத்தை படித்துக் கொண்டிருந்த வேளையில் எங்கள் மகளுக்கு காண்பித்த திரைப்படம் நாங்கள் சிறு வயதில் மிகவும் ரசித்த "Night at the Museum." 🎥

 The Case for Night at the Museum. “What's your favorite movie?” This is a…  | by Gwen Rogers | Medium

இது தற்செயலாக நடந்ததே. ஒரு அருங்காட்சியகம் இரவில் உயிர் பெறுவதாக எடுக்கப்பட்ட திரைப்படம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கக்கூடியது. அருமையான கதாபத்திரங்கள், திரைக்கதை மற்றும் வசனங்கள். தான் ஆராய்ச்சி மேற்கொண்டு வரும் ஒரு வரலாற்று ஆளுமையிடன் அவரை பற்றி அவரிடமே கேட்டு தெரிந்துகொள்வது போன்ற கட்சிகள் மிகவும் அருமை. 😍

இப்படத்தில் வருவது போல் ஒவ்வொரு அருங்காட்சியகத்திற்கும் உயிர் உண்டு. அவை நிச்சயமாக 'செத்த college' அல்ல. அவை நம்மிடம் நாம் மறக்கக்கூடாத கடந்த காலத்தைப் பற்றி தொடர் உரையாடல் நிகழ்த்துபவை. 🙌

Wednesday, May 8, 2024

கேள்வி நல்லா தான் இருக்கு - 2

எஸ். ரா. அவர்களின் "எலியின் பாஸ்வேர்டு" என்ற புத்தகத்தினை எனது ஏழு வயது மகள் வாசித்துக் கொண்டிருக்கிறாள். ஒவ்வொரு வரியிலும் அவளுக்கு என்னிடம் பரிமாரிக்கொள்ள எதோ ஒன்று உள்ளது என்பது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

 எலியின் பாஸ்வேர்டு | Buy Tamil & English Books Online | CommonFolks

அந்த கதை எலிகள் - பாம்புகள் தொடர்பானது. இப்புத்தகத்தில் இதுவரை ஏழு பக்கங்களை மட்டுமே படித்துள்ள எனது மகள் கூறிய இரண்டு விஷயங்கள் ஆழமானவையாக எனக்குப்பட்டது.

ஒன்று, "நாமும் பாம்புகள் தான்." (ஏன் என்று கேட்டதற்கு, வீட்டிற்குள் எலி வந்தால், நமக்கு ஆபத்து இல்லாத போதும் அடிக்க முற்படுவதால் என்று விளக்கினாள்)

இரண்டு, "ராஜா தான் இத கேக்கனும்." (இக்கதையில் அனுமதி பெற்ற பின்னரே எலிகளை கொல்லலாம் என சட்டம் போட்டு அறிவித்த பிறகும் பாம்பு ஒன்று எலியை கொன்று திங்கும். அதனால் சட்டம் இயற்றின ராஜா ஏன் கேட்காமல் இருக்கிறார், அவர் தானே இதை கேட்க வேண்டும் என்ற நியாயமான கேள்வி இயல்பாகவே அவளுக்கு எழுந்துள்ளது)

பெரியவர்களின் எந்த ஒரு குறுக்கீடும் இல்லாமல் வாசிக்கும் சிறுவர்களால் பல கோணங்களில் இயல்பாகவே சிந்திக்க இயலும் என்பதற்கு இன்னுமொரு உதாரணம்.

Elections and Government Schools

I happened to read a couple of articles on dailies on the plight of government schools post-election in India. It is a well-known fact that government schools are the first in line to be assigned as polling booths throughout the county followed by aided, private schools and higher education institutions. Government servants from across departments take part in this mega event, predominantly school teachers.

 Election Commission of India - Wikipedia

In other words, government schools and teachers are the major players in every election. But the saddest part is that their schools are left in an undesired manner after elections. Without a choice, polling officials end up using every wall of the school to stick election essentials which could not be easily removed later. Government schools struggle really hard to get their walls painted, floors renovated, blackboards refurbished, so on and so forth. Many schools run from pillar to post to get these things done by the government, some succeed in bringing in non-governmental organizations (NGOs) and philanthropists and few schools restore themselves with the help of their own teachers. These hardships are not respected, to say the least, by the election process that take these schools for granted. Every time after an election, the look of the school changes for bad. So far, the Election Commission has not taken this into consideration and allocated funds to rectify this state of affairs.

But as we technologically grow in every election and spend in millions to run this show, it is time for the Election Commission to share a little with government schools, at the least, to undo this disorder. Even otherwise government schools do not have a say in being assigned as polling booths. Yet, this tiny concern would lift the spirit of our schools and teachers to happily lend their space to election and not dissuade the philanthropists to continue their support.

It goes without saying that the election officials do have to treat their temporary space during elections with utmost care and concern. Most importantly not to complain about basic facilities such as fans and toilets as our children live with it every other day!! 💫

Who Wrote the Indian Constitution? 💭

"Who wrote the Indian Constitution?" - If this question was asked to me, I would have straight away said "Dr Ambedkar", ...