Wednesday, February 25, 2026

புத்தகக் கண்காட்சி - மாற்றம் தேவை

நெல்லையில் 9வது புத்தகத் திருவிழா நிறைவடைந்தது. சென்னை புத்தகத் திருவிழாவை ஒப்பிடும் போதோ, இன்னும் ஒரு சில பெரிய நகரங்களை ஒப்பிடும் போதோ இது மிக மிகச் சிறியது. எனினும் மாவட்டந்தோறும் தமிழக அரசு நடத்துவது மிகவும் பாராட்டுக்குரியது. இது போன்ற மாவட்ட புத்தகத் திருவிழாக்கள் இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திலும் இல்லை என்பது சிறப்பு.

                                              google images
எனினும் இந்த ஆண்டு நெல்லை புத்தகக் கண்காட்சியில் கண்ட ஒரு பெரும் குறை பலரால் விவாதிக்கப்பட வேண்டும் என்று நினைக்கிறேன். 

புத்தகக் கடைகள் குறைவு தான். அதிலும் குழந்தைகளுக்கென பிரத்யேகமான புத்தகக் கடைகள் வெகு குறைவு. அதிலும் தமிழில் ஒன்றிரண்டு மட்டுமே. ஆங்கிலத்தில் ஐந்தாறு இருந்தன. பெற்றோருடன் குழந்தைகள் வருகின்றனர். அது தவிர பள்ளிகள் குழந்தைகளைக் கூட்டமாக அழைத்து வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் பள்ளிகள், கல்லூரிகள் குழந்தைகளை அழைத்து வருவதை உறுதி செய்கின்றனர். 

பள்ளிகளை பொருத்தவரை அரசு பள்ளி குழந்தைகள் குறைவாகவும், தனியார் பள்ளி அதிகமாகவும் அழைத்து வருவதை பார்க்க முடிகிறது. ஏனெனில் அரசு பள்ளிகளுக்கு தனியார் பள்ளிகளைப் போன்று போக்குவரத்து வசதி இல்லை. அதிலும் சிறிய குழந்தைகளை பொது பேருந்தில் அழைத்து வருவது சிக்கல் தான். இவ்வாறு பல இடையூறுகளுக்கிடையில் தான் குழந்தைகள் புத்தகத் திருவிழாவிற்கு அழைத்து வரப்படுகின்றனர். பிள்ளைகளை புத்தகங்கள் கொட்டிக்கிடக்கும் இடத்திற்கு அழைத்து வருவதே சவால் நிறைந்து.

இவ்வாறு இருக்கையில் புத்தகத் திருவிழாவின் ஒரு சில (பல) கடைகளில் அரசு பள்ளி சீருடையில் இருக்கும் மாணவர்கள் புத்தகங்களை தொட்டுப்பார்க்கக் கூட கடை பொறுப்பாளர்கள் அனுமதிப்பதில்லை என்பது வேதனைக்குரியது!!!! குழந்தைகள் தனியாக கடைகளுக்குள் சுற்றிப்பார்த்தால் எந்தத் தடையும் இல்லை. புத்தகங்களை தொட்டு, எடுத்துப் பார்க்கும் போது, "எடுக்காதே, தொடாதே, கலைக்காதே" என்று நேரடியாக சொல்லப்படுகிறது. ஆங்கில புத்தகக் கடைகளில் இவ்வாறு நடப்பது அதிகம். தமிழ் புத்தகக் கடைகளில் குறைவு. பெற்றோருடன் வரும் குழந்தைகளிடம் இவ்வாறு நடப்பது அரிது. மேலும் வயதில் மூத்த பள்ளி மாணவர்களிடமும் இவ்வாறு பெரும்பாலும் சொல்லப்படுவதில்லை. சிறிய குழந்தைகளிடமே இவ்வாறு நடந்து கொள்கின்றனர். தனக்காக குரல் கொடுக்க முடியாத குழந்தைகளிடம் நம் அதிகாரத்தைக் காட்டியே பழக்கப்பட்ட சமூகம் தானே நாம்!

பல நேரங்களில் எந்த குழந்தை புத்தகம் வாங்க காசு வைத்திருக்கும் என்ற முன்முடிவோடு அங்கு பலர் அமர்ந்திருக்கின்றனர். புத்தகம் வாங்கினாலும், வாங்காவிட்டாலும் பார்க்கும் உரிமை குழந்தைகளுக்கு இல்லையா!? இல்லையெனில் "குழந்தைகளுக்கு அனுமதி இல்லை" என்று எழுதி ஒட்டிவிடலாமே! இப்போக்கினை நான் சென்னையில் கண்டதாக நினைவில்லை. சிறிய ஊர்களில் இது அதிகம் என்று நினைக்கிறேன். வேறு சிலரும் பள்ளி மாணவர்களுக்கு, அதிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு, இவ்வாறு நடப்பதை அவர்களும் கண்டதாகத் தெரிவித்தனர்.

பல முயற்சிகளுக்குப் பிறகு பள்ளிக் குழந்தைகள் புத்தகத் திருவிழாக்குள் வருகின்றனர். புத்தகங்களை தொட்டு, எடுத்து பார்க்கக் கூட அனுமதிக்காவிட்டால், அவர்களை எவ்வாறு வாசிப்புக்குள் கொண்டு வரப்போகிறோம்? இவ்வாறு தடுக்கப்பட்டால், அவமதிக்கப்பட்டால் புத்தகங்களிடமிருந்து குழந்தைகளை இன்னும் தூரமாக்குகிறோம் என்பதில் சந்தேகமேயில்லை.

No comments:

புத்தகக் கண்காட்சி - மாற்றம் தேவை

நெல்லையில் 9வது புத்தகத் திருவிழா நிறைவடைந்தது. சென்னை புத்தகத் திருவிழாவை ஒப்பிடும் போதோ, இன்னும் ஒரு சில பெரிய நகரங்களை ஒப்பிடும் போதோ இது...