கிரியின் கதையை படிக்கும் போது சில நினைவுகள். பதினைந்து ஆண்டுகளுக்கு முன் நாங்கள் சென்னைக்கு "மிக அருகில்" குடியேறிய போது, அடுத்த நிலத்தில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட இருந்தது. அப்போது வேறு மாநிலத்தைச் சேர்ந்த குடும்பம் அங்கு வந்து சேர்ந்தனர். அப்பா, அம்மா, பெரியவள் ஆறு வயது இருப்பாள், சின்னவள் இரண்டு வயது இருக்கும். அந்த சிறிய குட்டி அனைவரையும் ஈர்க்கக்கூடியவள். அவளை கொஞ்சுவது வழக்கம். அவ்வாறே பெரியவளும் பழக்கமானாள். இருவருக்கும் மற்றவரின் மொழி கொஞ்சமும் தெரியாது. எனினும் பேசிக்கொள்வோம். சைகை செய்து கொள்வோம். அவர்களின் தாயுடனும் அவ்வாறே.
சில நாட்களில் கழித்து தொடர்ச்சியாக இரண்டு, மூன்று நாட்களாக பெரியவளைக் காணோம். அவளின் அம்மாவிடம் கேட்ட போது சென்ற வார இறுதியில் அவர்களில் சொந்த ஊருக்கு அருகில் உள்ள விடுதி வசதியுடன் கூடிய பள்ளியில் சேர்த்து விட்டதாகவும், பார்ப்பதென்றால் மாதமொரு முறை மட்டுமே எனவும் கூறினார். எங்களுக்கு அதிர்ச்சி. முதலாம் வகுப்பு படிக்கும் வயது மட்டுமே. எனினும் விடுதியில் சேர்க்கப்பட்டது கவலையளித்தது. அவளின் பெற்றோருக்கும் கவலை தான். ஆனால் அவர்களுக்கு வேறு வழியில்லை. இங்கு மொழி பிரச்சனை, ஒரே இடத்தில் வேலை இருக்காது. மாறிக் கொண்டே இருக்க வேண்டும். குழந்தைக்கு கல்வி அவசியம் என்று உணர்ந்தவர்கள், பிரிவே மேல் என்று முடிவு செய்து குழந்தையை பிரிந்து வாழத் தொடங்கினர். அவள் தங்கிய விடுதியின் தொலைபேசி எண்ணில் வாரம் ஒரு முறை பேசுவோம். ஆம்! நானும் தான் பேசுவேன் - மொழி பிரச்சனையைத் தாண்டி தான்!
சில மாத காலத்திற்குப் பிறகு அடுத்த பணியிடத்திற்கு அவர்கள் செல்ல வேண்டிய நேரம் வந்தது. அந்த குழந்தையையும், தாயையும் பிரிவது கண்ணீர் வரவழைத்தது. எனது தோழி அழகான ஒரு குழு புகைப்படத்தை எடுத்து ஆளுக்கொரு நகலினை கொடுத்தாள். அப்புகைப்படம் எங்குள்ளது என்று தேடிப்பார்க்க வேண்டும். இனி இரண்டு மூன்று ஆண்டுகளில் இந்த குழந்தையும் ஏதோவொரு விடுதியில் தங்கி பயிலும் என்று தோன்றியது. அதன் பிறகு சிறிது காலத்தில் அவர்களுடனான தொடர்பு அறுந்துவிட்டது.
இன்று யோசிக்கையில் அக்குழந்தைகளின் பெயர் கூட நினைவில் இல்லை. எங்கோ நல்ல நிலையில் இருப்பார்கள் என்று நினைத்துக் கொள்கிறேன். நாம் சர்வ சாதாரணமாக "வடக்கன்ஸ்" என்றும் இன்னும் பிற வசை பாடும் சொற்களாலும், ஏளனம் செய்யும் சொற்களாலும் நம் மாநிலத்தில் வேலை செய்ய வருபவரை அடையாளம் காண்கிறோம். அவர்களின் சொந்த ஊரை விட்டு, உறவுகளை விட்டு, ஏதோ ஒரு வேலை செய்து தன் குடும்பத்தைக் காக்க போராடிகிறார்கள். அதிலும் இது போன்ற போராட்டத்தில் அக்குடும்பங்களின் குழந்தைகள் அனுபவிப்பது தனி போராட்டம் தான்.
No comments:
Post a Comment