ஒவ்வொரு தேர்தலிலும் மனதில் நிற்கும் பல சம்பவங்கள் இருக்கும். அது போன்று தான் இம்முறையும். 💗
2026 சட்டமன்ற தேர்தலின் போது ஒரு அரசு பள்ளியில் தேர்தல் பணியிலிருந்தேன். நல்ல வெயில். பக்கத்துக் கட்டத்திலிருந்த கழிப்பறைக்குச் செல்வதே அந்த வெயிலில் கொடுமையாக இருந்தது. அப்படிப்பட்ட வெயிலில் 85 சதவிகதத்திற்கும் அதிகமானோர் நான் பணியிலிருந்த வாக்குச்சாவடியில் வாக்களித்தனர். இயல்புக்கு மாறாக நிறைய குழந்தைகள் வந்திருந்தனர். பல சுவாரஸ்யங்களை கவனிக்க நேர்ந்தது. 😍
அவற்றுள் மனதை ஏதோ செய்த ஒன்று, இந்த நிகழ்வு. 💖
மதியம் 2 மணி இருக்கும். (வெயிலை மறந்து விட வேண்டாம்) ஒரு அம்மா (65 வயதிருக்கும்) கையில் இரண்டு பைகளுடன் வாக்களிக்க வந்தார். இரண்டு பைகளையும் வாக்குச்சாவடியில் வாயிலில் வைக்கலாமா என்று கேட்ட பின்னர் அங்கு வைத்துவிட்டு உள்ளே வந்தார். தலையினை மொட்டை அடித்திருந்தார். மிகவும் சிரமப்பட்டு, பொறுமையாகச் சென்று வாக்களித்து விட்டு வந்தவர் தான் அரசு மருத்துவமனையிலிருந்து நேரடியாக வருவதாகவும், புற்றுநோய் சிகிச்சை பெற்று வருவதாகவும் சொன்னவுடன் அதிர்ந்தது. கையில் கொண்டு வந்த பையானது மருத்துவமனையிலிருந்து கொண்டு வந்த துணிகள் மற்றும் மருந்துகள் என்றார்.
ஒரு புற்றுநோயாளி, தன் உடல்நலம் குன்றிய நிலையில், தன்னுடன் துணைக்கு வர எவரும் இல்லாமல், மூட்டை முடிச்சுடன், மருத்துவமனையிலிருந்து நேரடியாக வாக்களிக்க வருவது என்பது என்னால் சற்றும் நம்ப முடியாமல் போயிருக்கும், இதனை நான் நேரில் கண்டிராமல் இருந்திருந்தால்!
அந்த கண்களிலும், உடலிலும், மனதிலும் என்னென்ன ஏக்கங்களுடன், எதிர்பார்ப்புகளுடன் அவர் வந்திருப்பார் என்பதை உங்களால் ஊகிக்க முடிகிறதா!!!
அவருக்கு அவர் எதிர்பார்ப்பது கிடைக்க அந்த இயற்கையிடம் பிரார்த்திப்பதை தவிர என்னால் வேறு என்ன செய்ய முடியும்!! 💚
No comments:
Post a Comment