Friday, October 31, 2025

புத்தகங்களும் மொழியாக்கங்களும் - அனுபவப் பகிர்வு

சமீபத்தில் சமூக ஊடகங்களில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது உம்பர்ட்டோ எக்கோ எழுதி தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட "ரோஜாவின் பெயர்" என்ற புத்தகம். எதிர் வெளியீடு. இப்புத்தகத்தை நான் வாசிக்கவில்லை. பலர் இதனின் மொழியாக்கம் மோசமாக உள்ளதை சுட்டிக்காட்டினர். குறிப்பாக எழுத்தாளர் சாரு நிவேதிதா அவர்கள் இதனை கடுமையாக விமர்சித்திருந்தார்.

எனது சொந்த அனுபவத்தில் நேரடி ஆங்கில புத்தகமானால் அதனை வாசிப்பதே சிறந்தது என்ற எண்ணம் உண்டு. பிற மொழி புத்தகங்கள் ஆங்கிலத்தில் கிடைக்காத பட்சத்தில் தமிழில் வாசித்தல் நலம் என்று எண்ணுவது உண்டு. இதெல்லாம் மீறியும் பல புத்தகங்களின் தமிழ் மொழியாக்கத்தை வாங்கிவிடுவதும் உண்டு. இந்த "ரோஜாவின் பெயர்" புத்தக சர்ச்சையின் போது தான் நான் இரண்டு புத்தகங்களை ஒரு வருடத்திற்கும் மேலாக வாசிக்க முடியாமல் திணறுவது நினைவுக்கு வந்தது. அப்புத்தகங்களை வாசிக்க அவ்வளவு சிரமமாக இருந்தது. படு மோசமான மொழியாக்கம். அந்த இரண்டுமே (கீழே) எதிர் வேளியீட்டுப் புத்தகங்கள் என்பது அதிர்ச்சி.



இதனைத் தொடர்ந்து மக்கள் பதிப்பாக (இலாப நோக்கமற்ற) வெளிவந்த "வால்காவிலிருந்து கங்கை வரை" என்ற புத்தகத்தின் மொழியாக்கமும் சிறப்பாக இல்லை. மேற்குறிப்பிட்ட இரண்டு புத்தகங்களைவிட இது மேல். ஆனால் சில இடங்களில் அப்பட்டமாக ஆங்கில வார்த்தைகளின் நேரடி தமிழ் அர்த்ததை வழங்கியுள்ளது அபத்தம்.


ஆங்கிலமும் பிற மொழிகளும் தெரியாதவர்கள் அம்மொழிகளின் இலக்கயத்தினை அறிவது மொழியாக்கங்கள் மூலம் தான். மொழிப்பெயர்ப்பாளர்கள் இரண்டு மொழிகளிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமில்லையா!!! மொழிபெயர்ப்பு என்பது சுலபமானதாக பார்க்கப்படுவது கொடுமையானது. நேரடியாக எழுதுவதைக் காட்டிலும் மொழியாக்கத்திற்கு திறமையும், தேர்ச்சியும் கூடுதலாகத் தேவை என்ற அடிப்படை புரிதல் கூட இல்லாமல் புத்தகங்கள் அச்சில் ஏறுவதும், ஏற்றப்படுவதும் பெரும் சமூகச்சிக்கல் தான். சற்றேனும் பொறுப்புணர்ச்சியுடன் பதிப்பகங்களும், மொழிபெயர்ப்பாளர்களும் செயல்பட வேண்டியது அவர்களின் கடமை. 

குழந்தைகள் மீது திரைப்படங்கள் ஏற்படுத்தும் தாக்கம் 💖

இன்று வெளிவரும் பெரும்பாலான தமிழ் படங்கள் குடுப்பத்துடன் பார்க்கக் கூடாதது. பெரியவர்களே பார்க்க தகுதியில்லாத படங்கள் தான் வெளிவருகின்றன. அம்மாதிரியான படங்களைக் கூட நாம் குடும்பத்துடன் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். இதன் மூலம் பல மோசமான முன்னுதாரணங்களை குழந்தைகளுக்கு நாமே அறிமுகப்படுத்தும் அவலம் தான் நிலவுகிறது.

இதன் விளைவாக பெரியவர்களாகிய நமக்கே "நல்ல" திரைப்படங்களைப் பார்க்கும் பொறுமை இல்லை. "விறுவிறு" என்று இருக்கும் படங்களையும், "மாஸ்" திரைப்படங்களையுமே பார்க்க விரும்புகிறோம். அதுவே சலிப்புத் தட்டாது என்று நமக்கு நாமே சொல்லுக்கொண்டிருக்கிறோம். இம்மாதிரியான சூழலில் எனக்கு ஏற்பட்ட இரண்டு அனுபவங்களை பகிருகிறேன். 

இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஒரு இரவில் இணையத்தில் "அன்பே சிவம்" என்ற திரைப்படத்தை பார்த்துக் கொண்டிருந்தோம். படம் முடிந்தவுடன் மகள் ஒரே அழுகை. என்னவென்று சொல்லத் தெரியவில்லை. ஆனால் அந்த இரவு அழுதுகொண்டே உறங்கினாள். முதன்முறையாக என் குழந்தையின் மேல் திரைப்படம் ஏற்படுத்திய தாக்கத்தைக் கண்டேன். பெரிதாக கதை புரிந்ததா என்பது தெரியாது. ஆனால் ஏதோ உணர்வுகளை தூண்டியுள்ளது.


சென்ற மாதம் "The Way Home" என்ற கொரியன் திரைப்படத்தை இணையத்தில் காண துவங்கினோம். எப்போதும் போல தொடர்ச்சியாக பார்க்க முடியாமல் மீதியை மறுநாள் பார்க்க முடிவு செய்தோம். மறுநாள் இப்போதே பார்க்க வேண்டும் என்று மகள் கேட்டதால் அவளை பார்க்கச் சொல்லிவிட்டு நாங்கள் சமையலறையில் வேலைப்பார்த்துக் கொண்டு இருந்தோம். திடீரென பெரும் அழுகையுடன் வந்து கட்டிக்கொண்டு "என்னால தனியா பாக்க முடியல. அப்பறம் சேந்து பாப்போம் ம்மா," என்றாள். 

  

மேற்குறிப்பிட்ட இரண்டு சம்பவங்களும் "அழுகை" என்ற உணர்ச்சியை குழந்தைக்கு தூண்டியது மட்டுமே தாக்கம் என்றில்லை. சந்தோஷமான உணர்ச்சிகளைத் தூண்டும் நல்ல திரைப்படங்களும் உண்டு. எவையெல்லாம் உண்மையில் சந்தோஷம் என காட்டும் திரைப்படங்கள் உண்டு. மகிழ்ச்சியின் பல்வேறு வடிவங்களை காணமுடியும். சமீபத்தில் தமிழில் வந்த "பறந்து போ" மாதிரி.

எனினும் பிறரின் இடத்தில் தன்னை நிறுத்தி பார்ப்பதும், அவர்களின் வலியை நம் வலியாக உணர்வதும் எவ்வளவு பெரிய தன்மை. அதனை "நல்ல" திரைப்படங்கள் போன்ற கலையால் நிச்சயம் செய்ய முடியும். 

#அன்பே_சிவம்    #the_way_home   #children_movies

Thursday, October 9, 2025

அடுத்தவருக்காக பேசுவது எப்போது?! 😔

(1)

சமீபத்தல் Youtubeல் ஒரு கானொளியைக் கண்டேன். ஒரு பேராசிரியர் காரணம் சொல்லாமல் ஒரு மாணவியை வகுப்பை விட்டு விரட்டுகிறார். அதனைத் தொடர்ந்து சட்டம் எதற்கு என்ற கேள்வியை மற்ற மாணவர்களிடம் கேட்க ஆளுக்கு ஒரு பதிலினை தருகிறார்கள். 'Justice' என்று தான எதிர்பார்த்த வார்த்தைக்காகக் காத்திருந்து அதனை பெற்றவுடன் "நான் அம்மாணவியை வெளியில் அனுப்பும் போது ஏன் ஒருவர் கூட என்னை தடுக்கவும் இல்லை அல்லது ஏன் அனுப்புகிறீர்கள் என்று எந்த கேள்வியும் கேட்கவில்லை," என்று பேராசிரியர் வினா தொடுக்க வகுப்பறை பதில் இல்லாமல் திக்குகிறது. தன்னுடன் வாழ்பவருக்காக (அநியாயத்தின் வளைக்குள் சிக்குபவர்களுக்காக) தன் குரலை சிறிதளவேனும் திறக்க இயலாதது எவ்வளவு பெரிய ஊனம்!!

(2)

சமீபத்தில் தேனி சுந்தர் அவர்கள் எழுதிய "உங்க ஜட்ஜ்மெண்ட் ரொம்ப தப்பு சார்" என்ற புத்தகத்தில் ஒரு சம்பவம். நூல் ஆசிரியரின் அனுபவம். ஆசிரியரான சுந்தர் அவரின் வகுப்பிற்கு செல்கிறார். வீட்டுப்பாடத்தினை சரிபார்க்கும் சமயத்தில் முடிக்காமல் வந்திருந்த ஒரு மாணவியை திட்டுகிறார். உடனே உடன் படிக்கும் மாணவர்கள் "ஏன் சார் திட்றீங்க? நாளைக்கு முடிச்சிட்டு வந்திடுவா. விடுங்க சார்," என்கிறார்கள். சம நண்பருக்கு பேசியதைக் கேட்டு ஆசிரியரும் விட்டுவிடுகிறார். வகுப்பில் நிலவும் ஜனநாயகத்தன்மையினை காட்டுவதோடு தன் தோழிக்காக பேசிய மாணவர்களைக் காணும் போது மகிழ்ச்சி ஒரு பக்கமும், நாம் அவ்வாறு இல்லையே என்ற அவமானம் இன்னொரு பக்கமும் எழுகிறது.

                                                               PC: google images

குழந்தையிலேயே பழகாமல் போனால் என்றுமே அடுத்தவருக்காகப் பேசும் திறனை வளர்த்துக்கொள்ள முடியாது போலும். இந்த வயதிலும் எனக்கு சகஜமாக வருவதில்லை. இதனை பெரும் குறையாக உணர்கிறேன்.😞 இன்றைய குழந்தைகளிடம் இதை வளர்க்க என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்கிறேன். ஏனெனில் வளர்ந்தபின் என்னைப் போன்று குற்றவுணர்ச்சி இல்லாமல் இருக்க உதவலாம்.

புத்தக கொலு 2025 💟

2023 நவராத்தியின் போது பணிபுரியும் அலுவலகத்தில் புத்தக கொலு ஒன்று வைத்து (https://pryashares.blogspot.com/2023/10/blog-post.html) பல புகார்களையும், மொட்டைக் கடுதாசிகளையும் பரிசாகப் பெற்றேன். சரி 2024ல் 'சும்மா இருப்போம்' என்று இருந்தேன். ஆடின காலும், பாடிய வாயும் சும்மா இருக்காது என்பார்கள். 2025ல் மீண்டும் புத்தக கொலு. ஆனால் இம்முறை எங்களின் டோமோயி நூலகத்தில்!  புகார் எழுத முடியாமல் ஒரு கும்பல் தவித்துக்கொண்டிருக்கிறது. 

இம்முறை கொலுவிற்கு தினமும் ஐந்தாறு குழந்தைகளும், இரண்டு மூன்று பெரியவர்களும் தொடர்ச்சியாக ஒன்பது நாளும் வந்தனர். மைக்கில் புத்தகங்களை வாசித்து மகிழ்ந்தனர்.

மெத்தப் படித்தவர்கள் வசிக்கும் பகுதி தான் என்றாலும் தலையைத் திருப்பிக் கூட பார்த்துவிடக் கூடாது என்று ஓடியவர்களைக் கண்டேன். பேசாம ஒரு வாரம் வேற ரூட்டுலப் போவோம் என்று ஓடியவர்களும் இருப்பார்கள். தெரிந்தவர்கள் கூட தெரியாதவர்கள் போன்று நடந்துக் கொண்டார்கள். சும்மா பாருங்க வாங்க என்றாலும் வரத் தயங்கினர்.

ஆசிரியர்கள் அல்லது கல்விக் கூடங்களில் பணிபுரிபவர்கள் அதிகம் உள்ள பகுதி. ஆனாலும் கொலு பார்க்க வருபவர்களுக்கு வழங்க வைக்கப்பட்டிருந்த 100 புத்தகங்களில் 10 புத்தகங்கள் மீந்துள்ளன. எப்புடி எங்க கொலுல கூட்டம் அலமோதிருக்கும்னு யோசிக்கோங்க! சிலர் பரிசாகக் கூட புத்தகம் வேண்டாம் என்று கூறினர். ஒன்றிரண்டு குழந்தைகள் கூட!!!!!

தினமும் ஒரு தலைப்பில் கொலு வைத்திருந்தோம்.

முதல் நாள்: கல்விசார் புத்தகங்கள்


இரண்டாம் நாள்: சமகால சிறார் இலக்கியம்


மூன்றாம் நாள்: சமகால தமிழ் இலக்கிய நூல்கள்


நான்காம் நாள்: சிறார் இதழ்கள்

ஐந்தாம் நாள்: வின்னி த பூ, நூற்றாண்டு கொண்டாட்டம்


ஆறாம் நாள்: சூழலியல் புத்தகங்கள்


ஏழாம் நாள்: பெண்கள் சார்ந்த நூல்கள்


எட்டாம் நாள்: சிறார்களுக்கான ஆங்கில இலக்கியம்


ஒன்பதாம் நாள்: போரும் குழந்தைகளும்


கொலு முடிந்து சில நாட்களுக்குப் பிறகு ஒரு செய்தித்தாளில் கொலு புகைப்படம் ஒன்றை கண்டு என் மகள் அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும், "அம்மா, கொலுல பொம்ம வெச்சிருக்காங்க ம்மா.. கொலுல பொம்மக் கூட வெக்கலாமா???? புக்ஸ் தான வெக்கனும்?" என்றாள். ஏனோ அவளிடம் இன்னும் நான் எந்த பதிலும் சொல்லவில்லை. சிரித்து கடந்துவிட்டேன் அக்கேள்வியை!

Wednesday, October 8, 2025

அரசியல் கூட்டங்களில் பெண்கள்

பயணத்தில் இரு புத்தகங்களை கொண்டு செல்வது வழக்கம். நெடு நேரம் வாசிக்கும் போது சோர்வு ஏற்பட்டால் என்ன செய்வது என்பதற்கான ஏற்பாடு. சில வேளைகளில் இரு புத்தகங்களும் வாசிக்கப் பிடிக்காமல் கைப்பேசியை நோண்டுவதும் உண்டு.

நேற்று அலுவலக வேலையாக வெளியூருக்கு செல்லும் போது சின்னதாக ஒரு புத்தகத்தை எடுத்து செல்லலாம் என அலமாரியில் தேடுகையில் இமையம் அவர்கள் எழுதிய "வாழ்க வாழ்க" புத்தகம் சிறியதாக இருந்ததால் எடுத்துக் கொண்டேன். சென்றிருந்த அலுவலகத்தில் காத்திருப்பு அதிகமாக இருந்ததால் இப்புத்தகத்தை எடுத்தேன்.

வாழ்க வாழ்க - இமையம் - க்ரியா | Buy Tamil & English Books Online |  CommonFolks 

கரூர் சம்பவம் நடந்து 10 நாட்களை ஆன நிலையில் இப்புத்தகத்தை கையில் எடுத்தது இயற்கையின் விதியில் நடந்த ஒரு நிகழ்வு. ஒரு அரசியல் கூட்டம் நடக்கையில் ஒவ்வொரு ஊரிலிருந்தும் மக்களை, குறிப்பாக பெண்களை (சில நேரங்களில் குழந்தைகளுடன்) வண்டிகளில் ஏற்றிச் செல்வதும் அதன் தொடர் நிகழ்வுகளாக நடப்பவைக் குறித்தும் எழுதப்பட்டுள்ள குறுநாவல்.

நாம் அறிந்த, ஆதங்கப்படுகிற பல விஷயங்களை நமக்கு மீண்டும் நியாபகப்படுத்துவதாக பல பகுதிகள் உள்ளன. பெண்களுக்கு உடுத்த கொடுக்கப்படும் சேலையில் தொடங்கி, பெண்களுக்கு குடிக்க தண்ணீர் கிடைக்கிறதோ இல்லையோ, ஆண்களுக்கு சாராயம் கிடைப்பது வரை ஏராளமான விஷயங்களை இந்நாவல் கையாண்டுள்ளது. நான் இதுநாள் வரை யோசிக்கத் தவறிய ஓரிரு விஷயத்தை அறிய வைத்தது இந்நாவல். 

ஒன்று, இக்கூட்டத்திற்கு வண்டியில் ஏற்றி அழைத்துச் செல்லப்படும் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒவ்வொரு வாழ்க்கையும் ஒவ்வொரு வலியும் உள்ளது. ஆணாதிக்கச் சமுகத்தில் பல பெண்களுக்கு 'இருத்தலே' போராட்டம் தான்.

மற்றொன்று, இவ்வாறான கூட்டங்களில் குடிநீர் வசதியில்லை, புழுக்கம் போன்றவை நாம் பெரும்பாலும் பேசுவது தான். ஆனால் இந்த பெண்கள் "எங்கு சிறுநீர் கழிப்பர்?" என்று நான் இதுவரை யோசித்ததில்லை. இப்புத்தகம் அதை யோசிக்க வைத்தது. பாரபட்சமின்றி ஆண் தலைவர் கூட்டமோ, பெண் தலைவர் கூட்டமோ, பெண்கள் ஒதுங்க இடம் பெரும்பாலும் இருப்பதில்லை, அப்படியே இருந்தாலும், அது கூட்டம் நடக்கும் இடத்திலிருந்து வெகு தூரமாகவும் பாதுகாப்பின்றியும் இருப்பதாகவே தோன்றுகிறது இப்புத்தகத்தை வாசிக்கையில்.

அரசியல் கூட்டங்களில் அல்லல்படும் பெண்களின் நிலை மாற இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகுமோ!! 

குட்டி ஆகாயத்தின் புதிய கதை - ஜெனியின் பரிசு

குழந்தைகளின் பிரார்த்தனைகள் என்னவாக இருக்கும்? என்னவாக இருந்தாலும் பெரியவர்களின் அறிவுக்கு எட்டாததாகத்தான் இருக்கும்!! "ஜெனியின் பரிசு...