Friday, January 27, 2023

பெற்றோர்களே காரணம்

டோமோயி நூலகம் தொடங்கி ஒரு வருடமாகப் போகும் நிலையில், அடுத்த நூலகம் சார்ந்த பணி மந்த நிலையிலேயே உள்ளதை நினைத்து பல நாள் வீட்டில் உரையாடுவதுண்டு. அனைத்தும் சாத்தியமாவதில்லை என்ற நிதர்சனம் புரிந்து அடுத்த வேலையை கவனிக்கத்தொடங்குவோம்.

நூலகம் நிரந்தர கட்டடத்தில் வைக்க முடியாமல் போனால் என்ன? நாமே நடமாடும் நூலகமாக செயல்பட தொடங்குவோம் என முடிவு செய்தோம். உலகின் பல மூலைகளில் இம்மாதிரியான நடமாடும் நூலகங்கள் பல இருந்துள்ளன. இன்றும் உள்ளன. (Inspired by 'That Book Woman', 'The Bibbliburro')

அருகாமையில் உள்ள  வெள்ளாளங்குளம் என்ற கிராமத்திற்கு குடும்பசகிதமாக இரு மூட்டைகளை சுமந்து தெருக்களில் நடக்கத் தொடங்கினோம். அந்த ஊரில் தான் எங்களுக்கு பசும்பால் தரும் நபரின் வீடு உள்ளதால் அங்கிருந்து தொடங்குவோம் என எண்ணி அவர்கள் வீட்டில் உள்ள மூன்று பெண் குழந்தைகளுக்கு புத்தகங்களை அளித்தோம். ஒருத்தி மட்டும் அப்புத்தகத்தை தொடவே மாட்டேன் என உறுதியாக இருந்தாள். நான் படிக்க மாட்டேன், எனக்கு வேண்டவே வேண்டாம் என திடமாகக் கூறினாள். சரி என அந்த வீட்டின் ஒரு பிள்ளையைக் கூட்டிக் கொண்டு வீடு வீடாகச் செல்லத் துவங்கினோம்.

தெருவில் சில குழந்தைகள் ஆர்வமாக புத்தகங்களைப் பெற்றுக் கொண்டதுடன் தன் தோழர்களையும் கூப்பிட்டுவந்து புத்தகங்களைப் பெற்றுச் சென்றனர். சில தாய்மார்கள் இலவசமாகத்தான் என்றவுடன் பெற்றுக்கொள்ள சம்மதித்தனர். பெரும்பாலான பெற்றோர்கள் கூறிய ஒரே விஷயம், "எங்க வீட்டுப் பிள்ளைங்க வீட்டுப்பாடத்தையே படிக்க மாட்டேங்குதுங்க, இதுல எதுக்கு இந்த புக் எல்லாம்." மேற்கொண்டு பேசவே வாய்ப்பு தரப்படவில்லை. விரட்டி அடிக்காத குறை.

கதை புத்தகங்களை விரும்பிப் படிக்கும் குழந்தைகள் தங்களின் பள்ளிப்பாடங்களை சிறப்பாக படிக்க இயலும் என்ற உண்மையை அவர்களுக்கு எப்படி புரிய வைப்பது!!!!

சிரமம் தான். அதனால் தான் அந்த ஊர் பிள்ளைகளுடன் 'கோலி' விளையாடி நண்பர்களாக முயற்சி செய்கிறோம். நமக்கு எதுக்கு பெரியவங்களோட சகவாசம்! 😆

No comments:

Post a Comment