Wednesday, March 27, 2024

ஆன் ஃப்ராங்க் - ஒரு இளம் பெண்ணின் நாட்குறிப்பு

எனது பிறந்தநாள் அன்று எனக்கு பிரியமான குழந்தைகளான ஜோஹன் மற்றும் ஹரிணி இப்புத்தகத்தை பரிசளித்தார்கள். ஏனோ எடுத்து வாசிக்கப்படாமலே இருந்தது. 'ஆண்ட்டி, அந்த புக் படிச்சீங்களா?' என கேட்டனர். இப்புத்தகம் 'ஸ்லெட்டாவின் நாட்குறிப்பு' போன்றது என்பதாலேயோ என்னவோ ஒரு தயக்கம். ஆனாலும் இப்போது முடித்துவிட்டேன்.

 Diary of a Young Girl (PREMIUM PAPERBACK, PENGUIN INDIA) - Penguin Random  House India

இராண்டாம் உலகப்போரிலிருந்தும், ஹிட்லரிடமிருந்தும் தங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள ஆன் ஃப்ராங்க் என்ற 12 வயது சிறுமியின் குடும்பம் வேறு இரு குடும்பங்களுடன் இரகசிய இருப்பிடத்தில் (ஆனின் வார்த்தைகளில் 'இணைப்பகத்தில்') சில 'ஜெர்மானிய' நண்பர்களின் உதவியால் தஞ்சம் அடைகிறார்கள். பதின் பருவத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் ஒரு சிறுமி தன் இயல்பு வாழ்க்கையை தொலைத்து நட்பு ஏதும் இல்லாமல் தனக்கு பரிசாக கிடைத்த ஒரு டைரியை தன் நட்பாகக் கொள்கிறாள். அதற்கு 'கிட்டி' என பெயர் சூட்டி தான் சொல்ல நினைக்கும் அனைத்தையும் அதில் எழுதுகிறாள்.

கோவிட் காலக்கட்டத்தில் வீட்டினுள் முடங்கிக் கிடந்ததை நாம் மறக்க மாட்டோம். எவ்வளவு கடினமாக இருந்தது என அறிவோம். அதைவிட பல மடங்கு சொல்லிலடங்கா துயரமானது போர் காலத்தின் இரகசிய வாழ்க்கை என்பதை இப்புத்தகத்தை வாசிக்கையில் உணரமுடியும். அதுவும் ஒரு சிறுமியின் பார்வையிலிருந்து.

மிக விரைவில் போர் முடிவுக்கு வரும் என்ற ஆசையுடன், எதிர்பார்ப்புடன் ஆன் வாழ்ந்து வருகிறாள். இணைப்பகத்தில் தினம் நடப்பவையை குறிப்பில் எழுதுகிறாள். அங்கு வசிக்கும் அனைவரும் தினம் சந்திக்கும் பிரச்சனைகள், சாப்பாட்டில் வரும் சண்டைகள், கழிப்பறை போராட்டங்கள், அமைதி காக்க வேண்டிய நேரங்கள், மனச்சிக்கல்கள், இடப்பற்றாக்குறை என பலவற்றையும் நம்மால் காணமுடிகிறது.

ஒரு குழந்தையின் உள்ளுணர்வை வெளிப்படையாக நம் முன் நிறுத்துகிறது. தன் தாயை ஆன் பல சமயங்களில் வெறுக்கிறாள். தந்தையின் மீது வெறுப்புணர்வு அதிகரிக்கிறது. தன் அக்காவுடன் இணைப்பகத்தினுள் பக்கத்தில் இருந்தும் கடித பரிமாற்றம் செய்து கொள்கிறாள். நேரில் பேச இயலாதவைக் கூட கடிதம் மூலம் சுலபமாக செய்யமுடிகிறது என நம்புகிறாள். அவ்வாறு தன் தந்தைக்கு வெளிப்படையாக ஒரு கடிதத்தினை எழுதி அவர் மனம் நோகும் போது குற்றவுணர்ச்சியில் உரைகிறாள்.  ஒரு சிறுமியை பெரியவர்கள் எவரும் புரிந்துகொள்ளவில்லை எனவும், அதற்கான முயற்சியைக் கூட எடுக்க முன்வருவதில்லை எனவும் கொதிக்கிறாள். ஓரிரு வருடத்தில் தன்னை இன்னும் ஒரு குழந்தையாகவே நினைத்து நடத்தப்படுவதை எதிர்க்கிறாள். நாம் குழந்தைகளை புரிந்துகொள்ள தவறுவதை ஆழமாக உணரவைக்கிறது. படிக்கும் பெரியவர்களுள் பெரும்பாலானவர்கள் குற்றவுணர்ச்சிக்கு தள்ளப்படுவதை தவிர்க்க முடியாது.

தன்னுள் தோன்றும் காதல், காமம் போன்ற 'சிக்கலான' ஆனால் 'இயற்கையான' பலவற்றையும் தன் டைரியில் குறித்துள்ளார். உலக நடப்புகள் பற்றி உதவ வரும் நண்பர்கள் மூலமும், வானொலி மூலமும் கேட்டறிந்துக் கொள்கின்றனர். இணைப்பகத்தில் உள்ள நாட்கள் ஏற்ற இறக்கம் நிறந்ததாகவே இருந்துள்ளன. உடலாலும், மனதாலும் பாதிக்கப்பட்ட வண்ணம் இருந்துள்ளனர். இதற்கிடையில் சிலரது மரண செய்திகள், திருட்டு மற்றும் கொள்ளைச் செய்திகளும், அனுபவங்களும் இவர்களை பயத்துடனே வைத்துள்ளது. மாட்டிக்கொள்வோமோ, கொல்லப்படுவோமோ என்ற அச்சம் அவ்வப்போது எழுகிறது.

இணைப்பகத்தில் உள்ளவர்களுக்கான மிகப்பெரிய பொழுதுபோக்கு புத்தகம் வாசிப்பது. ஏராளமான புத்தகங்கள் வாசிக்கப்படுகின்றன. ஆன், தான் என்ன புத்தகம் வாசிக்க வேண்டும் என பெரியவர்களால் சொல்லப்படுவதை விரும்புவதே இல்லை. அப்பகுதி நம் குழந்தைகளை நினைவூட்டுகிறது. ஆன் தன் டைரியில் உலக அரசியலை எழுதுகிறாள். அதனால் தன் வாழ்க்கையில் ஏற்படும் பொருளாதார சிக்கலையும், தினசரி உணவு பிரச்சனைகளையும் பதிவிடுகிறாள். பெரியவர்களின் அரசியல் நிலைப்பாட்டில் குறை காண்கிறாள். யாருக்கும் எந்த நன்மையும் தர இயலாத இந்த போரினை ஏன் பெரியவர்கள் நடத்துகிறார்கள் என ஆன் என்ற சிறுமிக்கு புரியவில்லை. நமக்கும் தான்!!!! ஹிட்லருக்கு ஏன் யூதர்கள் மேல் இவ்வளவு வெறுப்பு என்பதற்கும் அவளுக்கு விடை கிடைக்கவில்லை. ஆனால் ஒரு முறை ஹிட்லரை கொல்லும் முயற்சியைப்பற்றி கேள்விப்பட்டு மிகுந்த மகிழ்ச்சியடைகிறாள். ஹிட்லரின் இறுதிகாலம் நெருங்குவதாக எண்ணி திருப்தியடைகிறாள்.

கிடைத்த நேரத்தில் ஒருவருக்குத் தெரிந்ததை மற்றவருக்கு சொல்லுத்தருதலுடன், தானும் புதிதாக சிலவற்றை கற்றுக்கொள்கிறார்கள். ஆனின் மனதில் அவளின் பள்ளி நினைவுகளும், தோழிகள் பற்றிய நினைவுகளும் இருந்த வண்ணம் உள்ளன. பல பேர் ஜெர்மானியர்களால் கொல்லப்பட்டுவரும் நிலையில் தான் பாதுகாப்பாக இருப்பதை நன்றியோடு மனதில் நிறுத்தினாலும், தான் மீண்டும் சுதந்திரமாக, இயற்கையோடு வாழும் வாழ்க்கையை எதிர்நோக்கி ஏக்கத்துடனும், எதிர்பார்ப்புடனும் காத்துக்கொண்டிருக்கிறாள்.

இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக பாதுகாப்பாக இருந்தவர்கள் போர் முடிய சில மாதங்களே இருக்கும் நிலையில் ஜெர்மானியர்களிடம் மாட்டிக்கொள்கின்றனர். ஒவ்வொருவரும் ஒவ்வொரு இடத்திற்கு இழுத்துச் செல்லப்படுகின்றனர். ஆனின் தந்தை மட்டுமே தப்புத்துக்கொள்கிறார். இவர்களுக்கு உதவியவர்களும் தண்டிக்கப்படுகிறார்கள். பெற்றோர்களிடமிருந்து பிரிக்கப்பட்டு தன் அக்காவுடன் அடைத்து வைக்கப்பட்ட இடத்தில் 'டைஃபஸ்" நோயால் இருவரும் ஒருவர் பின் ஒருவராக இறக்கிறார்கள். 

ஏன் கொல்லப்படுகிறோம், எதற்கு இந்த இனவெறி, போர் என எதுவும் அறியாத, அல்லது புரிந்துகொள்ள இயலாத குழந்தைகளின் உயிர்கள் பரிக்கப்பட்டன.  அவ்வாறே ஆன் கொடூரமான இந்த உலகைவிட்டுச் சென்றாள். அவளின் டைரியை நமக்காக விட்டுவிட்டு!!! 💓

Friday, March 15, 2024

கேள்வி நல்லா தான் இருக்கு!!

எங்களின் மகள் பிற குழந்தைகளைப் போன்று பல சுவாரஸ்யமான கேள்விகள், எடக்குமுடக்கானவை, ஆழமானவை என பலவாறு கேட்பதுண்டு. பெற்றோர்களாகிய நாங்கள் அவை பற்றி நிறைய பேசுவதுண்டு. ஆனால் இது வரை அக்கேள்விகளை எங்கும் எழுதி வைத்தது இல்லை. சிலவற்றையேனும் எழுதி வைக்க வேண்டும் அல்லது இம்மாதிரியான இடங்களில் பதிவு செய்து வைக்க வேண்டும் என தோன்றியுள்ளது. 

Thank god! Our kid hasn't asked us this question yet! 🙂 — If you want to  grow as a parent and understand your child better, take a look… | Instagram

அவ்வெண்ணத்தின் முதல் பதிவாக இன்று காலை எனக்கும் என் மகளுக்கும் இடையேயான உரையாடலின் ஒரு பகுதி. பள்ளி செல்லும் போது காரில் "கிட்டார் கம்பியின் மேலே நின்று" என்ற பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது. 

"இந்த பாட்டு உனக்கு பிடிக்குமா அம்மா?"

"கொஞ்சமா பிடிக்கும் பாப்பா."

"இந்த பாட்டுல டான்ஸ் ஆடுவாங்களா?"

"இல்ல. இருக்காது. இங்கயும் அங்கயும் நடந்திட்டிருப்பாங்க."

"அப்ப போர் தான்."

"ஆமா பாப்பா."

"எல்லா பாட்டுலேயும் girlsக்கு easyஆன steps தான் இருக்கும். இல்ல டான்ஸே இருக்காது. Boys க்கு தான் நல்ல steps இருக்கும் அம்மா."

"ஏன் பாப்பா அப்படி சொல்ற?"

"உனக்கு தெரியாதா? எல்லா பாட்டுலேயும் அப்படித்தான். Beastல வர பாட்டுல கொஞ்சம் பரவயில்ல. Don பாட்டுல அந்த அக்காக்கு ஒன்னுமே இருக்காது. இப்படி தான் எல்லா பாட்டுலேயும்."

"அப்படியா? சரியாதான் நீ சொல்றனு தோனுது பாப்பா. ஆனா ஏன் அப்படி girlsக்கு மட்டும் கொடுக்குறாங்கனு  நினைக்கற?"

"தெரில. ஒரு வேளை Girlsக்கு நல்லா ஆட வராதுனு நினைக்கறாங்கனு நினைக்கிறேன்."

"உங்க Dance classல அப்படியா நடக்குது?"

"இல்லையே. நாங்க boys & girls ஒரே மாதிரியான steps தான் practice பண்ணி ஆடுவோம்."

குழந்தைகள் எதையும் கவனிக்க தவறுவதில்லை. அது தொடர்பாக கேள்விகள் கேட்க தயங்குவதில்லை. நாம் வெளிப்படையான அல்லது நேர்மையான பதில்கள் தருகிறோமா!!!! அங்கு தான் சிக்கல் தொடங்குகிறது.

Wednesday, March 13, 2024

Miss you Mahe

As I wrote another post today on this blog, it immediately reminded me that I do not have Mahe, who was a wonderful sister and a loving daughter to me, who would always read and get back!!!!

Yeah, it's a month now since we lost a wonderful soul. It is still unbelievable that I often go back to your whatsapp profile to check if my last three messages were read only to find it is not. God, it is painful.

She is the only one to whom I had written those many number of letters so far. There were three of us who used to write to each other even while we were together physically everyday. She was one among the three. It is so heartwarming and heartbreaking at the same time to read her letters today. It does bring a lot of tears and smiles. Not sure to express how it feels. I regret that we did not continue our beautiful ritual of writing to each other.

She is never gonna get to read this letter of mine; yet, I for selfish reasons write this and make myself feel better. 

She is there, out there, somewhere in the sky. Watching her loving husband, tiny kid, her parents and all of us. That's how I feel. Such a wonderful soul who was never in any hurry in any of her works. Such a composed person who loved everyone, mostly unconditionally. We had our own ups and downs in our relationship and glad that we got back to where we left loving each others in her last few years, unaware of that fact. 

Those downs were mainly because of me as I felt a little suffocated with your love. Now I get that you showered all of us with abundance of your love, may be because of your short period of stay on this earth. I feel horrible for having missed you for while! Why did I, Mahe?! and now missing your forever. :-(

All those everyday train travels, long hour chats - in person and on mobile, sharing of letters, movies, restaurants, shopping - those are all so fresh in my mind and I feel terrible that your calm appearance had totally shattered in last few months. 

Though it began as a student-teacher, it grew as sisterly relationship and at one point we started feeling as a mother-daughter duo and it felt so lovely. May be that is why it is difficult to accept her absence.

Do not know what to write more. Wish I could pour out all that I have in me. May be some other time.

Miss you ammu. Love you loads and loads. My tightest hug and kiss to you da.

மஞ்சும்மல் பாய்ஸ் - ஓரிரு கருத்துகள்

தமிழகத்தின் தற்போதைய 'ட்ரெண்டிங் டாக்'  "மஞ்சும்மல் பாய்ஸ்" என்ற மலையாளத் திரைப்படம். மலையாளத் திரைப்படம் என சொன்னாலும் தமிழகத்தில் எடுக்கப்பட்ட, பழைய தமிழ் திரைப்படமான "குணா"வின் பாடல்களையும், "குணா" திரைப்படம் எடுக்கப்பட்ட குகையிலும், தமிழ் கதாபாத்திரங்கள் சரிசமமாக இருக்கும் திரைப்படம் "மஞ்சும்மல் பாய்ஸ்."

 Manjummel Boys - Sacnilk

மேலோட்டமாக பார்த்தால் நட்பினை கொண்டாடும் திரைப்படம் என தோன்றும். மக்கள் அப்படத்தை கொண்டாடும் விதத்தையும், அப்படத்தினைக் கொண்டு வெளிவரும் "மீம்ஸ்"கள்  ஆகியவை இப்படத்தினை பார்க்காத ஒவ்வொரு தமிழனயையும் ஏக்கப்படவும், ஏதோ குற்றவுணர்விற்கு உள்ளாக்குவதாகவும் இருந்தது/இருக்கிறது என்று சொன்னால் மிகையல்ல. குறிப்பாக இளைய தலைமுறையினரை.

ஆனால் படத்தில் கொண்டாடக்கூடிய அம்சமாக எனக்கு இருந்த ஒன்றே ஒன்று "குணா"வின் பாடல்கள். பெரிய திரையில் பெண் குரலில் ஒலிக்கும் "மனிதர் உணர்ந்துகொள்ள இது மனிதர் காதல் அல்ல, அதையும் தாண்டி புனிதமானது" என்பது அலாதியான அனுபவமாக இருந்தது.

சுற்றுலா செல்ல பணமில்லை என சொல்லும் ஒரு கதாபாத்திரம். 'நாங்க பாத்துக்குறோம், வா' என கூட்டில் செல்லும் நட்பு, வாகனத்தில் இடம் கொள்ளாத போதும் விதியை மீறி கூடுதல் ஆட்களோடு செல்வது, சுற்றுலாவினருக்கு 'பெண்' ஏற்பாடு செய்து தர முடியுமா என கேட்கும் ஒரு கதாபாத்திரம், குகையில் உள்ளே நுழைய தடை செய்யப்பட்ட பகுதிக்கு குடித்துவிட்டு மீறி நுழையும் கும்பல். இதில் பாராட்டிக் கொண்டாட என்ன உள்ளது?! தன்னால் கட்டாயப்படுத்தி அழைத்து வரப்படும் நண்பன் குகைக்குள் விழுவதும், அவனை காப்பாற்ற வேண்டிய கடமை தன்னுடையது என எண்ணுவதும் பாராட்டுக்குரியதே! எனினும் விதியினை மீறி செல்லாமல் இருந்திருந்தால் உயிர் ஆபத்து நிகழாமல் தவிர்த்திருக்கலாம் என பார்ப்பவர்களுக்கு தோன்றாமல் இருந்திருக்குமா என்ன?!!!

இப்படத்தை பார்த்து இதுபோல் செய்யத்துடிக்கும் இளசுகள் நிச்சயம் இருக்கும். அவ்வாறான விளைவே தற்போது கொடைக்கானலிற்கு படையெடுக்க தொடங்கியிருக்கும் சுற்றுலாவினர்.

"யானை டாக்டர்" படித்த எவரும் இத்திரைப்படத்தை கொண்டாட வாய்ப்பில்லை!!!

யானை டாக்டர் வி. கிருஷ்ணமூர்த்தி | வாசகம்


Wednesday, January 3, 2024

(அ)சாத்தியமான ஆசிரியர்களுக்கான ஒற்றுமை

சாவித்திரிபாய் பூலே அவர்களின் பிறந்தநாளான இன்று (03.01.2024) இப்பதிவினை அளிப்பதில் மகிழ்ச்சி!

புத்தாண்டில் முடித்த முதல் புத்தகம் வானவில் புத்தகாலயத்தால் ஆகஸ்ட் 2023ல் வெளியிடப்பட்ட முகில் அவர்களின் "மாண்புமிகு ஆசிரியர்கள்."  

 மாண்புமிகு ஆசிரியர்கள் - முகில் - சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் | panuval.com

இந்தியாவின் பல பகுதிகளை சேர்ந்த 20 அரசு பள்ளி ஆசிரியர்களின் (அ)சாத்தியமான பணிகளின் தொகுப்பாக இந்நூல் உள்ளது. ஒவ்வொரு ஆசிரியரும் தங்கள் முன் இருந்த பல தடைகளைத்தாண்டி தங்களின் பணியினை மேற்கொண்டு இலட்சியத்தை நோக்கி பயணிப்பது என ஒவ்வொருவரின் வாழ்க்கையினையும் நம்மால் உணர முடிகிறது. பல இடங்களில் கண்ணீரை அடக்க இயலவில்லை (நான் உணர்ச்சிகளுக்கு வசப்பட்டவள் என்பதாலும் இருக்கலாம்). ஒவ்வொருவரின் பணியிடமும், சூழலும் வெவ்வேறு என்றாலும் இவர்களின் பயணங்களில் என் பார்வைக்குப் பொதுவாக இருக்கும் சில விஷயங்களை குறிப்பிட விழைகிறேன்.

(1) இந்தியாவின் அனைத்து மூலையில் உள்ள பெரும்பாலான அரசு பள்ளிகள் சரியான ஆசிரியர்களின் வருகைக்காக இன்றும் ஏக்கத்துடன் காத்துக்கொண்டிருக்கின்றன.

(2) இப்பணியில் சேரும் போது உத்வேகம் உள்ளவர்களால் மட்டுமே சாதிக்க இயலும் என்பது இல்லை. தங்களின் பணியில் எந்த நொடியிலும் நமக்குள் ஒரு புதிய உந்துதலும், இலட்சியமும், நோக்கமும், குறிக்கோளும், பாதையும் உண்டாகலாம். உண்டாகக்கூடும். நம் மனதையும், புலன்களையும் திறந்து வைத்திருந்தால் போதுமானது. அதிசயங்கள் நமக்குள்ளேயே நிகழக்கூடும்.

(3) ஒரு அரசு பள்ளியில் பணிபுரிவது என்பதில் அங்கு பயிலும் குழந்தைகளைத்தாண்டி அவர்களின் பெற்றோர்களிடமும், ஊர் மக்களிடமும் ஒரு இணக்கத்தை ஏற்படுத்திக்கொள்வது முதன்மையான பணி. அதில் அவர்களின் மொழிக்கு பெரும் பங்குண்டு. மொழியின் வாயிலாகவே ஒருவரின் கலாச்சாரத்திற்குள்ளும், வாழ்வியலுக்குள்ளும் செல்ல இயலும் என்பதற்கு இப்புத்தகத்தில் வரும் ஆசிரியர்கள் உதாரணம்.

(4) அரசு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியரின் வாழ்க்கைத்துணையின் பங்கு இன்றியமையாதது. இவர்களின் ஒத்துழைப்பு என்பது ஒரு ஆசிரியரை துணிச்சலுடனும், மகிழ்ச்சியுடனும் பணி செய்ய வைக்கும். பிற குடும்ப உறுப்பினர்களின் பங்கும் அவசியமாகிறது.

(5) எந்தவொரு அரசு பள்ளியும் அரசின் பங்களிப்பைக் கொண்டு மட்டுமே இயக்குவது சாத்தியமாகா. அரசு சாரா நிறுவனங்கள், ஆர்வமுள்ள தனி நபர்கள், செல்வந்தர்கள், ஊர் மக்கள் என பலரின் பங்களிப்பினால் மட்டுமே சாத்தியம். ஊர் கூடியே தேர் இழுக்க முடியும். தங்களால் இயன்ற அளவுக்கு மக்களை சந்தித்து அவர்களால் இயன்ற உதவியை பெறுவதற்கு தயங்காத உள்ளம் கொண்டுள்ளனர் இப்புத்தகத்தில் வரும் ஆசிரியர்கள் அனைவரும்.

(6) ஒரு ஆசிரியர் புதிதாக ஒரு முயற்சி எடுக்கும்பட்சத்தில் எதிர்ப்புகள் வருவதைக்காட்டிலும் உடன் பயணிக்க விரும்புபவர்கள் அதிகமாக உள்ளனர். தங்களை வழிநடத்தினால் தாங்களும் அப்பாதையில் பயணிக்க தயாராக உள்ளனர். 

(7) அன்பினால் மட்டுமே மாணவர்களிடம் கல்வியினை மகிழ்ச்சியாக கொண்டு செல்ல முடியும். கண்டிப்பின் பங்கு மிகக்குறைவு.

(8) ஏட்டுக்கல்விக்கப்பால் செய்யப்படும் முயற்சிகளே மாணவர்களை ஆசிரியர்களுக்கு நெருக்கமாக்கும். புதிய முயற்சிகளை செய்து பரிசோதித்துப்பார்க்க இவர்கள் தயங்குவதில்லை.

(9) நல்லாசிரியர்கள் அனைவருமே தங்கள் பள்ளிகளில் சிறிய நூலகத்தை நடத்தி மாணவர்களை வாசிக்கத் தூண்டியுள்ளனர்.

(10) கொரோனா காலக்கட்டத்திலும் மாணவர்களை சந்திக்கவும் கற்றல் பயணத்தைத் தடையின்றி தொடரவும் புதிய வழிமுறைகளை கண்டடைந்துள்ளனர். எப்பேர்பட்ட தடையையும் தாண்ட இயலும் என்பதற்கு அந்நாட்களில் அவர்கள் எடுத்த முயற்சிகளே சாட்சி.

(11) புதிய பயணங்களுக்கு அஞ்சாதவர்களாக இருக்கின்றனர். புதிய முகங்களை சந்திக்கவும் உடன் பணிபுரியவும் எப்போதும் தயாராக உள்ளனர்.

(12) தங்கள் மேல் காழ்ப்புக்காட்டினாலும், தங்களின் முயற்சிகளை கேள்விக்குள்ளாக்கினாலும் அதற்கு பதில் கொடுத்து நேர விரயம் செய்யாமல் தங்கள் பணியை செவ்வனே தொடர்ந்து செய்யும் மனப்பக்குவம் கொண்டுள்ளனர். தங்கள் பணியினையே பதிலாக அளிக்கின்றனர்.

(13) கற்பித்தலைத் தாண்டி கற்றலை தொடர்ச்சியாக செய்வதின் பலனை தினம் காண இயலும்.

(14) தன்னைச் சுற்றியிருக்கும் அனைத்தையும் கற்றலுக்கு உபயோகப்படுத்த இயலும்.

(15) எந்த பலனையும், அங்கீகாரத்தையும் எதிர்பார்க்காமல் பணிபுரிகின்றனர்.

மேற்குறிப்பிட்டவை சமூகப்பணியில் ஈடுபடும் எந்தவொரு தனி நபருக்கும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது. 😇

Wednesday, November 1, 2023

யாருய்யா நீங்கலாம்! - "மாறா"

🎼வானத்துக்கும் மேகத்துக்கும் ஊடே உள்ள வீடொன்றில்; யாரும் வந்து ஆடிப்போகும் ஊஞ்சல் வைத்த என் முன்றில்🎼

 

🎼அலைவார் அவர் எல்லாம் தொலைவார்; வசனம் தவறு! அலைவார் அவர் தானே அடைவார்; அவர் அடையும் புதையல் பெரிது 🎼

 

🎼அருகினில் நானிருந்தேன், தொலைவினில் நீ இருந்தாய்; இரு கை நீட்டுகிறேன் எதிரினில் வாராய் 🎼

 

🎼துழாவித் தேடி கண்ணின் முன்பு கொண்டு வந்து காட்டும்🎼

 

🎼அடங்காத நாடோடிக் காற்றல்லவா 🎼

 

 🎼ஒரு வீடு பரிவோடு வரவேற்க நீளும் போது, அதனோடு உரையாடு, அது போல் ஒரு வரம் ஏது🎼

 

🎼பெரிய பெரிய மலையெல்லாம் தாண்டி, கடல் தாண்டி....ரொம்ப தூரம் போகப்போறேன்🎼

 

🎼போகும் போக்கில் போர்வை போர்த்தும் பூந்தென்றல்🎼

 

🎼இவ்ளோ அழகான பொன்னு 'மாறா'வ தேடுறானு மாறாவுக்கு தெரியுமா🎼

 

🎼முகவரிகள் இல்லா ஒரு முதல் கடிதமாய்🎼

 

🎼ஏழா......ம் மலையும் கடலும் தாண்டி🎼

 

🎼பேச வேண்டும் எவரும் அறியா மொழிகள்🎼


 எழுதிட்டே போகலாம்........ இப்படி மனச போட்டு ஒரு வழிப்பண்ற பாடல் வரிகள், வசனமெல்லாம் இப்போ அரிதான மாதிரி இருக்கு. ரொம்ப நாளைக்குப் பிறகு தமிழ் திரைப்படத்தில் அனைத்துப் பாடல்களும் விருப்பமானதாக அமைந்தது "மாறா"வில் தான். 

 Actor R Madhavan- Actress Shraddha Srinath starrer “Maara” - Moviewingz.com

நம் மன நிலைக்கு ஏற்ப பாடல் வரிகளும் மாறுகிறது. 

சந்தோஷத்தில் கேட்டால் புன்னகைக்கவும், 

சோர்வாக இருக்கையில் உற்சாகம் அடையவும், 

சோகத்தில் கேட்டால் மனம் விட்டு கண்ணீர் விடவும் செய்கிறது. 

பார்க்கவும் அழகோ அழகு தான்! 😘

யாருப்பா நீங்க எல்லாம்'னு ஜிப்ரான் அவர்களையும், தாமரை அவர்களையும், தொடர்புடைய மற்ற கலைஞர்களையும் கேட்கத்தோணுது!!!! 😍💕💖💗

Tuesday, October 31, 2023

Tamil Nadu and Drugs: A dangerous road 😕

Tamil Nadu has been excited about the latest movie release of actor Vijay. The expectation, hype and excitement seemed to do more with LCU aka Lokesh (Kanagaraj's) Cinematic Universe. For those who knew nothing about LCU, here is a briefing: Lokesh (the director) in his movie titled "Kaithi" dealt with drugs and a huge drug bust in a metropolitan city of Tamil Nadu and in the climax he hinted audience that it was to be continued. Since then, he has been connecting dots from one movie of his to another and it is one universe (all to do with drugs and gangsters and guns and violence and killings and so on and so forth) where drug busting is the epicentre. That's LCU! Movie lovers, media and the whole public have gone gaga over LCU.

Expectations LCU" | Movies, Movie posters, Poster

On the other hand, Tamil Nadu government has been directing educational institutions across the state for almost a year now to conduct regular checks on drug abuse and insisting to create awareness among youngsters on (negative) effects of drug (ab)use. It has gone to a level where every school/college is expected to conduct at least one awareness programme per month. The Government of Tamil Nadu calls it to be an initiative towards "drug-free" society. Apparently, it is a welcome move. Yet, it raises doubts and concerns if drugs are already readily available in our society and that has forced to implement such drug awareness programmes.

 Interview: On why Tamil Nadu has adopted multi-pronged strategy to counter  the drug menace - The South First

Looking at the above two scenarios, there is a question - Are movies reflecting the current state of Tamil Nadu as far as drugs are concerned? or Are the movies instigating the flow of drugs in the society by hyping it and confusing the audience in understanding heroes and villains in such drug-based movies? In fact, villains of LCU are loved more by the audience.😓😮 A side effect of this whole thing is culture of 'celebrating violence and villainous lead characters.'

Though it is true that any art would reflect what it observes around; it shouldn't turn out to be the other way round for God's sake!! In this case, I am not sure which triggers the other! 😒

Wednesday, October 25, 2023

புத்தகக் கொலு 💖💖💖

கிடைக்கும் வாய்ப்பில் எல்லாம் புத்தக வாசிப்பினை இளைய தலைமுறைக்கு கொண்டு செல்லும் ஆர்வக்கோளாறினால் இந்த நவராத்திரியில் கொலுவில் ஏன் பொம்மைகளுக்கு பதிலாக புத்தகங்களை வைத்து, இதை பார்ப்பவர்களுக்கு புத்தக வாசிப்பின் அவசியத்தினை விழிப்புணர்வாக வழங்கக்கூடாது என தோன்றி புத்தகக் கொலு வைக்கலாம் என்ற எண்ணம் உதித்தது. வீட்டில் வைத்தால் இரண்டு அல்லது மூன்று குடும்பங்கள் மட்டுமே பார்க்க இயலும் (வீடு இருக்கும் இடத்தின் தனிமையினால்). எங்கள் நூலகத்தில் வைத்தால்? அங்கும் அதே நிலைமை தான். ஆனால் ஏற்கனவே புத்தகங்கள் உள்ள இடம் தானே அது என்று எண்ணி நூலகத்தில் வேண்டாம் என்று நினைத்து, அலுவலத்தில் வைத்தால் என்ன என தோன்றிற்று. அலுவலகத்தில் அனைவரும் இதை வரவேற்று ஆளுக்கொரு பொருப்பினை எடுத்துக்கொள்ள முன்வந்தனர் (அவர்கள் அனைவருமே கல்லூரியின் அலுவலகப்பணியாளர்கள் என்பதை நினைவில் கொள்க!)

இதற்கிடையில்: இந்த மாத துவக்கத்தில் 50 வருட பழமையான எங்கள் கல்லூரியில் புத்தக திறனாய்வு எதுவும் இதுவரை நடைபெற்றதில்லை என்பதை அறிந்து வேதனையுடன், ஒவ்வொரு மாதமும் நான் ஒரு புத்தகத்தை எங்கள் கல்லூரி மாணவிகளுக்கு அறிமுகப்படுத்துகிறேன் என முன்வந்து, உரிய அதிகாரியின் அனுமதியுடன் 40 நிமிடத்திற்கு ஒரு புத்தககத்தை (பெண்களின் ஆடை: வரலாறும், அரசியலும்) அறிமுகம் செய்தேன். மாணவிகளின் மத்தியில் பெரும் மகிழ்ச்சி, மற்றும் வரவேற்பு. எனினும் ஆசிரியர்கள் குவிந்துள்ள ஒரு இடத்தில் ஒரு அலுவலகப் பணியாளராகிய நான் இந்த முன்னெடுப்பை எடுத்ததில் ஒரு அரசு அலுவலகத்திற்கே உண்டான சலசலப்பு இருந்ததாக புத்தகக்கொலு வைக்கவிருந்த நாளுக்கு இரண்டு நாள் முன்பு கேள்விப்பட்டு புத்தகக்கொலு எண்ணத்தை கைவிட நினைத்தேன்.

இம்மாதிரி சலசலப்புகள் நாம் செய்ய நினைக்கும் நற்காரியங்களுக்கு தடையாக இருக்கக்கூடாது என என் சக பணியாளர்கள் (அனைவரும் அலுவலகப்பணியாளர்களே!) தொடர்ந்து ஊக்குவித்தனர். நமக்குள் நாம் நன்மையினை தொடர்ந்து செய்வோம் என முடிவு செய்தோம். அதன் விளைவே 20.10.2023 வெள்ளி அன்று எங்கள் அலுவலகத்தில் உள்ள சிறிய இடத்தில் கல்லூரி முதல்வரின் ஒப்புதலுடன் நடைபெற்ற புத்தகக்கொலு. 🙌

கொலு வைக்கும் படிக்கட்டுகளின் விலை அதிகமாக இருந்த காரணத்தினால் என்ன செய்வதென்றி தெரியாமல் நின்றோம். ஒரு நாள் மட்டுமே இடையில் இருந்தது. பின்னர் ஆண்டுதோறும் கொலு வைக்கும் நபர் எவரெனும் இந்த ஆண்டு வைக்காமல் இருந்தால், கொலு படிக்கட்டுகளை பெறுவோம் என முடிவு செய்து, அவ்வாறு ஒருவரை கண்டுபிடித்து, படிக்கட்டுகளை பெற்றோம். அதனை வழங்கியவர் தங்கள் குடும்பத்தில் சிலருக்கு உடல்நலம் சரியில்லாத காரணத்தால் இவ்வாண்டு வைக்க இயலவில்லை எனவும், அவர்களின் கொலு படிக்கட்டுகள் இவ்வாண்டும் தொடந்து பயன்படுவதே மிக்க மகிழ்ச்சி எனவும் தெரிவித்து வழங்கினார். அதனை எங்களுக்கு தெரிந்தவரை தப்பும் தவறுதலுமாக அமைத்து முடித்தோம்.

ஐம்பது புத்தகத்தினையேனும் அறிமுகப்படுத்த வேண்டும் - வெவ்வேறு எழுத்தாளருடையது - என எண்ணி, ஒவ்வொரு படிக்கட்டும் ஒரு பிரிவாக அமைக்க முடிவு செய்தோம்.


 (1) சிறார் இலக்கியம்

(2) பெண்ணியம் சார்ந்த நூல்கள்

(3) கல்வி சார்ந்த நூல்கள்

(4) இயற்கை, சூழலியல் சார்ந்த நூல்கள்

(5) மொழிபெயர்ப்பு நூல்கள் (பிற மொழிகளில் பெரிதும் கவனத்தை ஈர்த்தவை)

(6) சமகால தமிழ் இலக்கியவாதிகளின் நூல்கள்

(7) விரும்பி யாரேனும் வைக்க நினைக்கும் அவர்களின் விருப்பமான நூல்கள் (எங்கள் கல்லூரி முதல்வர் இரு நூல்களை கொலுவிற்கு வழங்கினார்)

இவ்வாறு 80க்கும் குறைவில்லாத புத்தகங்களை அடுக்கி, சுற்றி பூவினாலும் அலங்கரித்தோம்.  

கொலுவிற்கு வருபவர்களுக்கு பரிசாக என்ன வழங்கலாம் என்று யோசிக்கையில், ஆளுக்கொரு புத்தகம் வழங்குவது சாத்தியமாகாது என எண்ணி, BOOK MARKS செய்து வழங்கலாம் என்ற முடிவுக்கு வந்தோம். அலுவலகப் பணியாளர் ஒருவரின் மகள் ஐம்பதுக்கும் மேற்பட்ட BOOK MARKS செய்துத்தந்தார் (ஒரே இரவில்). பின்னர் புத்தக வாசிப்பின் அற்புதத்தை விளக்கும் விதமாக ஆளுக்கொரு வாசிப்பின் மகத்துவத்தை உணர்த்தும் சீட்டினைத் தருவோம் என எண்ணி ஐம்பதினை தயார் செய்தோம். 😍

கொலு அன்று எங்கள் அனைவருக்கும் பெரிதாக ஏதோ சாதித்த மகிழ்ச்சி. இவ்வாறு ஒரு கொலு வைக்கப்பட்டுள்ளது என எந்த அறிவிப்பும் வழங்காமல் வாய்மொழியாக மட்டும் தெரிவித்து வருபவர்களை வரவேற்றோம். அலுவலகத்திற்குள் வந்து கொலுவினை ஒரு கண்டும் காணாமல் சென்ற ஆசிரியர்களும் உண்டு. பார்த்து வாழ்த்தியவர்களும் உண்டு. 50 சீட்டுகளில் 30 சீட்டுகள் மீதம் உள்ளது என்று நான் சொன்னால் கொலு பார்க்க வந்தவர்களின் எண்ணிக்கையை நீங்கள் கணக்கிட்டுக்கொள்ளலாம். 😆

எனினும் இதுவரை புத்தகங்கள் வாசிக்காத, வாசிக்கக்கிடைக்காத ஐவரேனும் கொலுவில் இருந்த புத்தகத்தினுள் தமக்கு பிடித்த புத்தகத்தினை எடுத்துச் சென்று வாசிக்கத் துவங்கினர்.💪

திருப்தியாக நாள் நிறைவடைந்தது. அதனினும் ஆச்சரியம், நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் இன்ஸ்டாகிரம் (Instagram) பக்கத்தில் அன்று இரவு எங்கள் அலுவலகத்தின் கொலு இடம்பிடித்தது. இது எவ்வாறு அங்கு சேர்ந்தது என்பது எங்களுக்குப் புதிரே!  இப்பூவுலகில் நன்மை மட்டும் இவ்வாறு பரவட்டும்! 💖💖💖



Friday, October 20, 2023

Doosra Delivery: Yet another learning 😇

Despite having watched Cricket during the days of Muthiah Muralidharan and Saqlain Mushtaq, I did not equip myself with techniques or intricacies. Till I watched the video (link given below), I did not know there was something called "Doosra" delivery. Though it is not an illegal delivery, it seems to be highly impossible for a bowler to do it straight. That is the not the point here. 😆
 
https://www.youtube.com/shorts/vCjWXqNZ-8k (enjoy this less than one minute video)

Teams (Sri Lanka vs Pakistan) played against each other. Srilankan Team had won the series but were stunned by the unique delivery of balls from Saqlain. As Muralidharan mentions in this video, despite being opponents, despite Saqlain being younger in age, and despite having won the series, it did not stop the former to reach out to Saqlain and ask about his 'mesmering' (doosra) deliveries. 
 
There was no ego in it and so was with Saqlain when he willingly shared his 'unique' technique to one of his opponents. On top of it, Muralidharan confesses that it took him three years to deliver it to perfection. 
 
 Importance of Sports Essay | Health Benefits, Sports for Nation
 
Learning is a continuous process, irrespective of one's success or failure! And this process without EGO is wonderful to experience and to watch as well 😘 
 
Yet another lesson for life from the ground & legends themselves! 💗

Tuesday, October 17, 2023

தோழர் & Politics

Politics - அரசியல்

15ம் நூற்றாண்டு முதல் 'அரசியல்' என்ற வார்த்தை நடைமுறையில் உள்ளது. கிரேக்க மொழியிலிருந்து வந்த இந்த வார்த்தையின் தமிழாக்கமாக 'அரசியல்' என்ற வார்த்தையினை கொள்ளலாம். ஆங்கிலத்தில் Politics என்பதை Art or Science of Government என்று கூறப்படுகிறது. அரசின் அல்லது அரசியல் கட்சிகளின் செயல்பாடுகள், மக்களுக்கும் - ஆட்சி புரிபவர்களுக்குமான உறவு, மக்களுக்கான கொள்கையினை உருவாக்குதல், மக்களும், நாடும் செழிப்புடன் இருத்தல், அமைதியான சூழல் ஏற்படுத்துதல் என பல்வேறு பணிகளின் கூட்டு வார்த்தையாக 'அரசிய'லைக் குறிப்பிடலாம். அரசியல் நம் அனைவரின் வாழ்வுமுறை.

அரசியல் என்பது ஒரு கலை. ஒவ்வொரு இடத்துக்கும், ஊருக்கும், நாட்டுக்கும் வேறுபடக்கூடியது. அங்குள்ள மக்களுக்கு, சூழலுக்கு, பொருளாதாரத்திற்கு, சித்தாந்தத்திற்கு, இன்னும் பல காரணிகளுக்கு ஏற்றார்போல் அரசியல் மாறுபடும்.

அதே வேளையில் அரசியல் அறிவியலும் கூட. அதன் கட்டமைப்பு எங்கும் குடிமக்கள் தாம். சில பிரச்சனைகளுக்கு பொதுவான தீர்வும் உண்டு. அதன் மூலப்பொருட்கள் ஒன்று தான். மக்கள்-பொருளாதாரம்-கொள்கை, இதனைச் சுற்றியே அரசியலின் கிளைகள் எங்கும் செயல்படும்.

அரசியல் என்பது மனிதனின் மாபெரும் கண்டுபிடிப்பாகவே எனக்கு எப்போதும் தோன்றும். தன்னை ஒழுங்குப்படுத்திக்கொள்ள அல்லது தன் மீது நிகழ்த்தப்படும் கொடுமைகளை எதிர்த்து தன்னை விடுவித்துக்கொள்ள அரசியல் தான் முதல் அறிவுசார் கருவி என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை. தனக்கென்று ஒரு வரையறைக் கொண்டு, அதை ஆள்வதற்கு ஒரு முறையினைக் கொண்டு, அதில் வரும் இடர்களுக்கு வழிகளை கண்டடைந்து ஒரு நாட்டினை, உலகினை கொண்டு செல்லுதல் என்பது மனிதனின் பெரும் வெற்றியாக நான் காண்கிறேன்.

 தேர்தல் களம்: பெண்கள் ஏன் அரசியல் பேச வேண்டும்? | Election field -  hindutamil.in

அப்படிப்பட்ட "அரசியல்" என்ற வார்த்தையினை ஒரு 'கெட்ட' வார்த்தையாக பாவிக்க தொடங்கியது, மனிதனுக்கு அரசியலில் உள்ளவர்கள் மீது ஏமாற்றமும், கோபமும் வருவதினால் தான் என தோன்றுகிறது. நம் திரைப்படங்களும் "அரசியல் ஒரு சாக்கடை" என்று அடிக்கடி சொல்லி நம்மை நம்பவும் வைக்கிறது. அரசியல் எப்படி "சாக்கடை"யாகும்? அரசியல் என்ற ஒன்று இல்லாமல் போனால் கலவரமும், யுத்தமும் தானே மிஞ்சும்?! அரசியல் சரியாக உள்ளதா இல்லையா என்பது வேறு வாதம். ஆனால் அரசியல் இல்லாமல் இருத்தல் சாத்தியமில்லை.

அதே போல் 'அரசியல்' பண்ணுகிறார்கள் என்ற வார்த்தையும் மிக அதிகமாக பிரயோகிக்கப்படுகிறது. யாரேனும் சூழ்ச்சி செய்தால் இவ்வார்த்தை தான் முதலில் வருகிறது. தனக்குப் பின்னால் யாரேனும் ஏதேனும் செய்தாலோ, பிரித்தாழும் சூழ்ச்சி என்று நினைத்தாலோ, முன்னுக்குப்பின் முரணாக பேசினாலோ, மறைமுகமாக ஏதும் செய்தாலோ, ஒருவருக்கு தீங்கு நேரும் வண்ணம் ஏதும் செய்தாலோ, அவன்/அவள் அரசியல் செய்கிறாள் என சொல்லப்படுகிறது. மேற்குறிப்பிட்டவைக்கு நேரெதிராக நன்மை செய்யும் எந்த செயலும் "அரசியல்" என யாராலும் குறிப்பிடப்படுவதில்லை. அந்த நன்மைக்குள் ஏதோ 'அரசியல்' உண்டோ ('தீங்கு' உண்டோ) என மட்டுமே எண்ணுகின்றனர். 

அரசியலை மற்றுமொரு தொழிலாக (profession) பார்க்கும் பாங்கு இன்று நமக்கிடையில் இல்லை. அதை தீண்டத்தகாத ஒரு தொழிலாகவே பார்க்கின்றனர். சமகால அரசியலில் உள்ளவர்களால் அந்த எண்ணம் மக்களிடையே விரிவடைகிறது. அதனால் நம் குழந்தைகளுக்கும், இளையவர்களுக்கும் அரசியலை அறிமுகப்படுத்த தயங்குகிறோம். ஆனால் உண்மை என்னவெனில் அரசியல் இன்றி இங்கு எதுவும் இல்லை. அரசியல் ஒரு "நேர்மறை"யான வார்த்தை. 👍

தோழர் & Politics

தோழர் & Politics - இந்த இரண்டு வார்த்தைகளும் சமீபத்தில் என்னை சிந்திக்க வைத்தவை. இரண்டுமே 'நல்ல' வார்த்தைகள் தாம். ஏனோ சில நெருடல்கள் எனக்குள் எழுந்துள்ளன. அதை லேசாக பகிரும் பதிவு தான் இது.

தோழர்

என் சிறு வயதில் அடுத்த வீட்டில் வசித்த ஒரு அண்ணா, அக்கா தன்னைவிட வயதில் மூத்த என் அம்மாவை 'சகோ' என அழைத்தது தான் இவ்வாறான மாற்று வார்த்தை உண்டு என நான் அறிந்த நேரம். வினோதமாக இருக்கும். பின்னர் அன்பே சிவம் என்ற திரைப்படத்தில் இடதுசாரியினராகவும், முற்போக்கு சிந்தனைவாதிகளாகவும் இருந்த வீதி நாடகக் கலைஞர்கள் ஒருவரையொருவர் 'சகா' என அழைத்தது அந்த வயதில் தனித்துவமாகத் தெரிந்தது. மேற்படிப்பு நாட்களில் "தோழர்" என்ற வார்த்தையை நிறைய கேட்க/படிக்க நேரியது. ஏனோ இந்த வார்த்தை இடதுசாரி கட்சிகளுடையது என என் மனதில் பதிந்துவிட்டது. தற்போது சமூக செயற்பாட்டுகளில் இருக்கும் போது சிலர் நம்மை தோழர் என்று அழைப்பதுண்டு.  அது எனக்கு வினோதமாகவும், கூச்சத்தை ஏற்படுத்துவதாகவும் இருக்கும். நாம் இடதுசாரி கட்சியை சேர்ந்தவரில்லை, நாத்திகவாதியும் இல்லை, முற்போக்கு இயக்கங்களிலும் இல்லை, சமூக செயற்பாட்டிற்காக முழு உழைப்பை போடுபவரும் இல்லை. இப்படி எந்த கட்டமைப்புக்குள் இல்லாதவராக இருந்தும் ஏன் ஒருவர் என்னை "தோழர்" என்று அழைக்கவேண்டும் என்ற கேள்வி எழுந்தது. ஒரு வேளை சே குவேரா அவர்கள் சொன்னது போல் சமூக கொடுமைகளை கண்டு ஆவேசம் கொள்வதால் நம்மையும் "தோழர்" என்று அழைக்கிறார்களோ?

 கலையகம்: #தோழர் - அரச அதிகாரத்தை அசைத்த பழந்தமிழ் வார்த்தை

அதனால் "தோழர்" என்ற வார்த்தையின் வரலாற்றினை தெரிந்து கொள்ள நினைத்தேன். ஃப்ரெஞ்ச் (French) நாட்டில் இருந்த மன்னர்களின், அதிகாரிகளின் அடைமொழிகளைக் (Titles) களைவதற்கு இது போன்ற வார்த்தைகள் முதலில் புழக்கத்தில் வந்துள்ளன. பின்னர் ரஷ்யாவில் புரட்சியின் போது "காம்ரேட்" (Comrade) என்ற வார்த்தை உருவாகியுள்ளது. இது போன்ற வார்த்தைகள் நாடுகளின் புரட்சிகளின் போது "காம்ரேட்" என்பதைத் தழுவி உருவாகி புழக்கத்தில் இருந்துவருகின்றன. அதன் ஒரு தழுவல் தான் "தோழர்" என்ற வார்த்தை. 

இவ்வார்த்தை தமிழ் இலக்கியங்களில் இருந்துள்ளது. 1000 வருடங்களாக இவ்வார்த்தை பயன்பாட்டில் உள்ளது என தெரிய வருகிறது. 'நட்பு' என்ற அர்த்தம் கொண்ட இந்த வார்த்தை தமிழக அரசியலில் பெரும் பங்கு வகித்துள்ளது. இவ்வார்த்தையினை முதன்முதலாக திரு.வி.க. அவர்கள் பயன்படுத்தியுள்ளதாக தெரிகிறது. ஒரு அரசியல் பொற்பொழிவினை மொழிபெயர்க்கையில் இவ்வாறு உபயோகித்துள்ளார். பெரியார் அவர்களும் இவ்வார்த்தியினை களப்பணியாளர்கள், தலைமைகள் என அனைவரும் பயன்படுத்த வேண்டும் என கூறியிருக்கிறார். தன்னையும் தோழர் என்றே அழைக்க வேண்டும் எனவும் தெரிவித்திருக்கிறார். தலைமைக்கும், தொண்டர்களுக்கும் எந்தவித வித்தியாசமும் இல்லாமல் ஒரு கட்சி/ஒரு அமைப்பு செயல்பட வேண்டும் என எண்ணி அவ்வார்த்தை உபயோகப்படுத்தப்பட்டிருப்பது தெரியவருகிறது. அவ்வார்த்தைக்கு தனி மரியாதையும், பதவியில் உள்ளவர்களுக்கு ஒரு அச்சத்தினையும் ஏற்படுத்தக் கூடியதாக இருந்துள்ளதை வரலாறு தெரிவிக்கிறது. ஒரு இலக்கை நோக்கி பயணிக்கும் அனைவரும் (அனைத்து படிநிலையும்) சமம் என வெளிப்படையாக தெரிவிக்கும் ஒரு மாபெரும் கருவியாக "தோழர்" என்ற வார்த்தை பயன்படுகிறது என கற்றுக்கொண்டேன்.

இன்று இவ்வார்த்தை பொதுவெளியில் பயணிக்கும் பலரும் பயன்படுத்தும் வார்த்தையாக உள்ளது என தோன்றுகிறது. ஒருவரின் அடையாளம் என்ன, சித்தாந்தம் என்ன அறிந்து கொள்ளாமல், மேலோட்டமாக தெரிந்த நபரை "தோழர்" என்று அழைப்பது, மற்றொருவரை எவ்வாறு அழைப்பது என்ற குழப்பத்தில் "தோழர்" என குறிப்பிடுவது, அவ்வார்த்தியினை பயன்படுத்துவதில் ஒரு செல்வாக்கு உள்ளது என காட்டிக்கொள்ள பயன்படுத்துவது, செயற்கையாக பயன்படுத்துவது என இந்த வார்த்தையானது தன் வலிமையை இழக்கிறதோ என தோன்றுகிறது. இவ்வார்த்தையின் அர்த்தம் நீர்த்துப்போகிறதோ என எண்ணம் உண்டாகிறது. 

அவ்வார்த்தை வழக்கொழிந்து போய்விடக்கூடாது என்பதால் அதிகமாக பிரயோகிக்கப்படுகிறது என்ற வாதமும் இருக்கலாம். எங்கள் அளவில் நாங்கள் தோழர்களே என்ற வாதமும்  வைக்கலாம். எப்படியுமே அடுத்தவர் அவ்வாறு அழைக்கப்படுவதை விரும்புகிறாரா என்று தெரிந்துகொள்ளுதல் அவசியம் என்பது என் கருத்து. இவ்வார்த்தியின் வரலாறு இதன் வீரியத்தைக் காட்டுகிறது. அரசியலை ஆட்டிப்படைக்க வல்லமை கொண்ட வார்த்தை என புரிந்துகொள்ள முடிகிறது. அதனை குறைத்து எடைபோடும் எந்த தகுதியும் எனக்கில்லை. எனினும் நம்மோடு பழகுபவர் அனைவரும் நமக்கு "தோழமை" ஆகிவிட முடியாது என்ற அடிப்படை வாதத்தினைக் கொண்டு இவ்வார்த்தை பிரயோகிக்கப்பட்டால் நலம் என்பது என் புரிதல். அவ்வாறு நடத்தல் அவ்வார்த்தையின் வீரியத்தை தக்க வைக்கும் என தோன்றுகிறது. இதற்கு மாற்று சொல் இருந்தாலும் தெரிந்துக்கொள்ள விரும்புகிறேன். 💖

Monday, July 10, 2023

யாருக்கான முடிவை யார் எடுப்பது?😕

பெண்ணியம் பேசுபவர்களால் சமீப காலமாக அதிகம் பேசப்படும் விஷயமாக உள்ளது - "ஏன் இந்த சமூகத்தில் பெண்களுக்கான முடிவுகளை  பெண்களால் எடுக்க இயலுவதில்லை?"

இங்குமங்குமாக இந்நிலை மாறி வருகிறது என்றாலும், பெரும்பாலும் பெண்கள் தொடர்பான முடிவுகளை அவ்வீட்டு ஆண்கள் எடுப்பது வழக்கமாக உள்ளது. என்ன படிக்க வேண்டும், யாரை திருமணம் செய்து கொள்ள வேண்டும், தன் வருமானத்தை எவ்வாறு செலவு செய்ய/சேமிக்க வேண்டும், யாருடன் பழக வேண்டும், எவ்வளவு நேரம் நண்பர்களுடன் நேரத்தை செலவிடலாம், யாரெல்லாம் நண்பர்களாக இருக்கலாம் என பல நிலைகளில் பெண்களுக்கான திட்டங்களை வகுப்பவர், முடிவுகளை எடுப்பவர் என ஆண்கள் உள்ளனர். இப்பொருள் தொடர்பான நிறைய கதைகள், கட்டுரைகள், திரைப்படங்கள், நாடகங்கள் சமீபகாலங்களில் வலம் வருகின்றன. இப்பேசு பொருள் எனக்கும் நெருக்கமானது என்பதால் அது தொடர்பாக கிடைப்பதை பார்ப்பதும், கேட்பதும் வழக்கம்தான். அப்படி சமீபத்தில் வாசித்த கட்டுரை ஷாலினி பிரியதர்ஷினியின் "மீட்சி-சித்திரம் 15" - நாடோடிச் சித்திரங்கள் என்ற புத்தகத்தில்.

 நாடோடிச் சித்திரங்கள்

இதிகாசங்களை விரும்பிப் படிப்பவள் அல்ல நான். சிறு வயதிலும் இதிகாசங்கள் பற்றிய கதைகளினை நிரம்ப கேட்டவளும் அல்ல. என்றாலும் கூட இராமயாணம் மற்றும் மகாபாரதம் இந்துக்களின் நடைமுறை வாழ்வியலுள் எப்படியேனும்  புகுந்துவிடக்கூடியது என்ற அளவில் இராமயாணம் மற்றும் மகாபாரதம் பரிச்சயம். மேற்குறிப்பிட்ட புத்தககத்தின் கட்டுரையில் இராமாயணத்தில் பெண்ணுக்காக ஆண் எடுக்கும் முடிவு குறித்தும் அதன் விளைவுக்குறித்துமான ஒரு கிளைக்கதை வாசிக்கக் கிடைத்தது. 

இராமயாணம் என்றால் இராமர் ('ர்' விகுதியில் எழுத வேண்டுமா என்ற குழப்பம் நெடு நேரம் எனக்கு இருந்தது), சீதை, லட்சுமனர், இராவணர், ஹனுமன், ஜடாயு போன்ற பெயர்களும், கதாபத்திரங்களும் தான் பிரபலம். கிளைக் கதைகளில் இன்னும் ஒரு சில பெயர்கள் தெரியவந்திருக்கும். அவ்வளவே. நான் ஊர்மிளை என்ற கதாபாத்திரத்தினை கேள்விப்பட்டதில்லை.

இராமயாணத்தில் வனவாசம் முடிந்து இராமன், சீதை, லட்சுமனன் ஆகியயோர் நாட்டுக்குத் திரும்பும் போது இராமருக்கும் சீதைக்கும் கிடைத்த வரவேற்பு லட்சுமனருக்கு கிட்டவில்லை என்பது வேறு கதை. ஆனால் அவரின் மனைவி ஊர்மிளை அவரைக் காண வெளியில் வரவில்லையாம். இவர் தன்  மனைவியை காண உள்ளே சென்றபோது கதவை அடைத்துக்கொண்டு அவரை காண விருப்பமில்லை எனவும் இனி என்றுமே அவருடன் வாழ விருப்பமில்லை எனவும் கூறியிருக்கிறார். சுற்றியுள்ள அனைவரும் ஒரு மனைவி தன் கணவரிடம் இவ்வாறு நடந்துக்கொள்வது தவறு என்று  கடிந்துள்ளனர். எனினும் தன் நிலைப்பாட்டிலிருந்து ஊர்மிளை சிறிதும் பிறழவில்லையாம்.

தான் இவ்வாறு நடந்துக்கொண்டதற்குக் காரணமாக அவர் சொன்னது தன் கணவர் காட்டுக்குச் செல்ல முடிவெடுத்தது வரை தவறில்லை. அது அவரின் வாழ்க்கை, அவரின் அண்ணன் மீது உள்ள மரியாதை. ஆனால் அவர் வனவாசம் செல்லும் போது தன் மனைவி எங்கு வசிக்க விரும்புகிறாள் என கேட்காமல் லட்சுமணரே ஊர்மிளை நான்கு சுவர்களுக்குள் இருக்க வேண்டும் என முடிவெடுத்து அதன்படியே நடந்துக் கொண்டது ஏற்கத்தக்கதல்ல என தெரிவித்துள்ளார்.  தனக்கான முடிவினை தன்னை கலந்தாலோசிகாமல் தனக்கு விருப்பமில்லாத பாதையை தேர்ந்தெடுத்து தன் வாழ்வின் 14 வருடங்களை சிரமத்துக்குள்ளாகியதைச் சுட்டிக்காட்டி தனக்கு தன் கணவருடன் இனி எந்த உறவுமில்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.  

அத்தைரியம் இல்லாத ஊர்மிளைகள் நம்மிடையே அதிகம்.😟

Wednesday, July 5, 2023

இரு வேறு சம்பவங்கள் 😊

முதல் சம்பவம்

சுதந்திர போராட்டக்காலம். காந்தியடிகளை குமரப்பா அவர்கள் நிச்சயம் சந்திக்க வேண்டும் என பலர் கூறி வந்த நிலையில், அவர்களின் சந்திப்பு நிகழ்ந்தது. குமரப்பாவின் வாழ்க்கையை மாற்றியது. தன் பங்கினை சிறப்பாக செய்து வந்தார் குமரப்பா. ஒரு முறை பீகாரில் நில நடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கான நிவாரணத் தொகை தொடர்பான வேலையில் இருந்துள்ளார். அப்போது ஒரு நாள் காந்தியடிகள் குமரப்பாவை சந்திக்க பீகார் வந்துள்ளார். குமரப்பாவிற்கு அப்பணியை வழங்கிய இராஜேந்திர பிரசாத் அவர்கள் குமரப்பாவை சந்திக்க இயலாது என தெரிவித்துள்ளார். குமரப்பாவின் பணியின் முக்கியத்துவத்தை புரிந்துகொண்ட காந்தி  குமரப்பாவை தான் நாளை சந்திக்க வருவதாகக் கூறிச் சென்றுள்ளார். மறு நாள் காந்தி வந்த போது குமரப்பா தான் வேலையாக இருப்பதாகக் கூறி மறுநாள் வரும்படி கூறியுள்ளார். காந்தி, தான் அன்று இரவே ஊருக்கு செல்வதாகக் கூறியவுடன், தன்னை சந்திக்க வருவதை முன் கூட்டியே தன்னிடம் தெரிவித்திருக்க வேண்டும் எனவும், தனக்கு வேலை இல்லாமல் இருந்திருந்தால் தானே காந்தி அவர்களை சந்திக்க வந்திருப்பேன் எனவும் கூறி காந்தியடிகளை சந்திக்கவில்லை. காந்தியடிகளும் தான் சந்திக்க வந்த காரணத்தை எழுதி குமரப்பாவிடம் சேர்க்கும்படி தந்துவிட்டுச் சென்றுள்ளார். (நன்றி: டிராக்டர் சாணி போடுமா?)

டிராக்டர் சாணி போடுமா? - ஜே.சி.குமரப்பா - தன்னறம் | panuval.com

இரண்டாவது சம்பவம்

டேவிட் ஹாஸ்பக் (David Horsburg) என்பவர் 1972ல் கர்நாடகா மாநிலத்தில் கிராமப்புற மாணவர்களுக்கு  மாற்றுக்கல்வியனை தன் "நீல் பாக்" (Neel Bagh) என்ற பள்ளி மூலம் வழங்கி வந்தார். அவரின் பள்ளியின் பெருமையினை கேள்விப்பட்ட அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி அவர்கள் ஒரு முறை கர்நாடக மாநிலம் சென்றிருந்தபோது தான் அந்த பள்ளியினை பார்வையிட விரும்பியுள்ளார். தன் ஆட்களை அனுப்பி தான் வரவிரும்பும் செய்தியினை டேவிட்டிடம் தெரிவித்துள்ளார். சிறிது யோசனைக்குப் பிறகு பிரதமர் அவர்களுக்கு தன்னால் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய இயலாது என்பதை அந்தச் செய்தி கொண்டு வந்தவர்களிடம் டேவிட் சொல்லி அனுப்பியுள்ளார். சில மணி நேரங்களுக்குப் பிறகு, தான் மட்டும் ஒரே ஒரு காரில் வருவதாகவும், அதிகபட்சம் இன்னொரு கார் மட்டும் வரும்படி தான் பார்த்துக்கொள்வதாகக் கூறி தன் ஆட்களை இந்திரா காந்தி அவர்கள் அனுப்பிவைத்துள்ளார். தன் பள்ளிக்கு பிரதமர் வந்து சென்றால் தேவையற்ற விளம்பரமாகும் என்று கருதியும், வருகைக்குப்பின் அவ்விடம் ஒரு சுற்றுலா தலமாகக்கூடும் என கருதியும் அவர்கள் வருவதை டேவிட் அனுமதிக்கவில்லை. பிரதமரும் டெல்லி சென்றுவிட்டார். எனினும் பிரதமர் தன் அலுவலகம் மூலமும், கர்நாடக மாநிலத்தின் பல்வேறு அரசு அலுவலகங்கள் மூலமும் பல விதமான அழுத்தங்கள், இடர்பாடுகள் கொடுக்கப்பட்டதை டேவிட் உணர்ந்துள்ளார். பெரிய பதவிகளில் இருந்த அவரது நண்பர்களும் இதனை உறுதிப்படுத்தியுள்ளனர்.  பிரதமரின் உத்தரவுகளை மீறி தங்களால் டேவிட் அவர்களுக்கு எந்த உதவியும் செய்ய இயலாதது குறித்தும் வருந்தியுள்ளனர். (நன்றி: PROJECT NOMAD)

Focus - 50 Years of Neel Bagh, started in Sep-1972 - SchoolScape 

தலைமை பண்பின் முற்றிலும் மாறுபட்ட உதாரணங்களாக இவ்விரு சம்பவங்களை பார்க்கிறேன். முதல் சம்பவத்தில் குமரப்பாவிற்கு இருந்த தெளிவும், துணிச்சலும் அதனை காந்தி அவர்கள் எடுத்துக்கொண்ட விதமும் இன்று காண்பதற்கரிது. இரண்டாம் நிகழ்வில் மற்றொருவர் இடத்திற்கு தான் வரவிரும்பியதை உரிய மரியாதையுடன் கேட்டனுப்பியது ஒரு புறம், அதை நிராகரித்த டேவிட் அவர்களின் தைரியம் ஆச்சரியத்தை அளிக்கிறது. அதன் பின்னர் நடந்தவை கசப்பானது என்பதும், அவை தலைமை பொறுப்பில் உள்ளவர்களுக்கு உகந்த பண்பில்லை என்பதும் மறுக்கயிலாது. 

'இல்லை', 'முடியாது' போன்ற வார்த்தைகளை நாம் சொல்லப் பழக வேண்டியது அவசியம். அதே போன்று அவ்வார்த்தகளை ஏற்றுக்கொள்ளவும் பெரிய கற்றலும் பக்குவமும் தேவைப்படுகிறது!!💖